முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

57 மீனவர்களை விடுவிக்ககோரி நடவடிக்கை எடுக்க கடிதம்

திங்கட்கிழமை, 17 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.18 - இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள 57 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் அப்பாவி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் தாக்குவதும், சட்ட விரோதமாக பிடித்துச்செல்வதும் தொடர்ந்து நடைபெறுவது பற்றி நான் மீண்டும், மீண்டும் உங்களுக்கு கடிதம் எழுதியபடி உள்ளேன். கடைசியாக ஜூன் 5-ந்தேதி தமிழக மீனவர்கள் 49 பேர் கடத்தி செல்லப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கு கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து 6.6.2013 அன்று உங்களுக்கு கடிதம் எழுதிய நான், தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரக அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன்.

ஆனால் இதற்கு இந்திய அரசு தரப்பில் எந்த கடுமையான, வலுவான நடவடிக்கையும் எடுக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. இந்த விஷயத்தில் இந்திய வெளியுறவுத் துறை தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது. தமிழக மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க இலங்கை அரசுடன் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாமல் உள்ளது. உண்மையில் தைரியம் இல்லாத இந்திய அரசு, தமிழ் நாட்டின் கடலோர பகுதியில் சிங்கள கடற்படையை நிற்க அனுமதித்துள்ளது. இதனால் தான் கடந்த 5-ந் தேதி 49 தமிழக மீனவர்கள் கடத்தப்பட்ட நிலையில் 15-6-2013 அன்று தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 8 அப்பாவி, ஏழை மீனவர்களை மீண்டும் சிங்கள கடற்படை கடத்திச் சென்றுள்ளது. இந்த 8 மீனவர்களும் ராமேசுவரத்தில் இருந்து இரண்டு எந்திரப் படகுகளில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். அவர்களைப் பிடித்துச் சென்ற சிங்கள கடற்படை மன்னாரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வரும் 27.6.2013 வரை 12 நாட்கள் காவல் வைத்துள்ளது.

தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து சட்ட விரோதமாக பிடித்து செல்லப்படும் இந்த சம்பவங்கள் மூலம் தமிழ்நாட்டு மீனவர்களிடையே, இந்திய அரசு தன் சொந்த குடிமகனை பாதுகாக்கும் துணிவும் திராணியும் இல்லாமல் இருப்பதை எண்ணி அதிருப்தி அடைந்து இருக்கிறார்கள் என்பதை சொல்லத் தேவை இல்லை.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், கைது நடவடிக்கைகள் பற்றி இந்திய அரசு உயர்மட்ட அளவில் இலங்கையுடன் பேச்சு நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். எனவே இந்த விவகாரம் குறித்து இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, அங்கு சிறை வைக்கப்பட்டுள்ள 57 தமிழக மீனவர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு அவர்களது படகுகளையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும். மேலும் 29.11.2011-ம் ஆண்டு முதல் இலங்கையில் உள்ள ஜெயில்களில் வாடி வரும் 5 அப்பாவி தமிழக மீனவர்களையும் உடனடியாக மீட்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago