முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி பிரச்சினை: கர்நாடக மீது அவமதிப்பு வழக்கு தாக்கல்

திங்கட்கிழமை, 1 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.2 - கர்நாடக அணைகளை கையகப்படுத்தி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்துவிட  நடுநிலையான அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டுமென்று தமிழக அரசின் சார்பில் தொடரப்பட்ட வழக்கையும், அம்மாநில அரசின் மீது தமிழக அரசு  தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் இம்மாதம் 12-ந் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட இடைவிடாத முயற்சியின் காரணமாக காவிரி நதிநீர் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டது.

நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்துவதற்கு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இடைக்கால ஏற்பாடாக காவிரி மேற்பார்வை குழு ஒன்று கடந்த மே மாதம் அமைக்கப்பட்டது. இந்த குழு இரண்டு முறை கூடியபோதும் கர்நாடக அரசு தமிழக அரசுக்கு தண்ணீர் தர மறுத்து விட்டது.

இதையடுத்து கடந்த மாதம் 25-ம் தேதி தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  

கர்நாடக அணைகளை கையகப்படுத்தி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு உரிய நடுநிலை அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டுமென்றும், ஜூன் மாதம் வழங்க வேண்டிய 10 டிஎம்சி தண்ணீரையும், இந்த மாதம் வழங்க வேண்டிய 34 டிஎம்சி தண்ணீரையும் உடனடியாக காவிரியில் திறந்துவிட வேண்டுமென்றும் ஒரு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் உச்சநீதிமன்றம் அமைத்த மேற்பார்வை குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லையென்று கர்நாடக அரசு கூறியதற்காக அந்த அரசிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றும் தமிழக அரசு தொடர்ந்தது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், நீதிபதிகள் விக்ரமஜித்சிங், இப்ராஹிம் கலிபுல்லா  ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி வாதிட்டார். அப்போது தமிழக அரசின் மனுக்களை விசாரணைக்கு நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். இந்த மனுக்கள் மீது இம்மாதம் 12-ந் தேதி விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்