முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முக்கியமான விவகாரங்கள் ராடியா டேப்பில் இருக்கிறது

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 8 - ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விவரங்களை விட எல்லை கடந்து பணப் பரிமாற்றம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல முக்கியமான விஷயங்கள் நீரா ராடியா தொலைபேசி உரையாடல்களில் இருக்கின்றன என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்களுடன் நீரா ராடியா பேசிய தொலைபேசி உரையாடல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்த உரையாடல் பதிவுகளை பகிரங்கப்படுத்தி அரசு தகவல்களை தனியாரிடம் பரிமாறிக் கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அரசு சார்பற்ற நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் டாடா குழுமத்தின் வழக்கறிஞரோ இதை பகிரங்கப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தார். 

கடந்த வாரம் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் பதிவுகள் மீது ஏன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத் துறைக்கு கண்டனம் தெரிவித்திருந்தது சுப்ரீம் கோர்ட். மேலும் உரையாடல் பதிவுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத வருமான வரித் துறை, சி.பி.ஐ. யின் போக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.

இந்த வழக்கு விசாரணை வரும் 6 ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்படுகிறது. அதற்குள் இரு துறைகளும் எழுத்துப் பூர்வமாக பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

மீண்டும் இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொலைபேசி உரையாடல் பதிவுகள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதா? அப்படி தெரிவிக்கப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே? இப்படி நீண்ட தாமதம் என்பது சரியானது அல்ல என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். இருப்பினும் அரசுத் தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது.  இந்த வழக்கின் மீது விசாரணை நேற்றும் நடைபெற்றது. அப்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், நீரா ராடியா டேப் விவகாரத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விவரங்கள் மட்டுமே இல்லை. எல்லை கடந்த பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல ஸ்பெக்ட்ரம் விவரங்களைவிட முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. இதன் மீது 2009 ம் ஆண்டு வரை ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? ஒரு தரகருக்கு இந்த அரசாங்கத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கு நடவடிக்கை எல்லாமே தெரிந்திருக்கிறது என்பதைத்தான் இந்த தொலைபேசி உரையாடல்கள் வெளிப்படுத்துகின்றன என்று காட்டமாக தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்