முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலியான 3 வாலிபர்களுக்கு நிவாரணம் வழங்க சி.பி.எம். கோரிக்கை

திங்கட்கிழமை, 9 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.10 - கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தின், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய கட்டாயபடுத்தியதால், உயிரிழந்த 3 அருந்ததி இன வாலிபர் குடும்பத்துக்கு, தலா ரூ.1 லட்சம் நிவாரணத்தொகை வழங்கவேண்டும் என்று சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதம் வருமாறு:-

கடந்த பிப்ரவரி மாதம் 21​ஆம் தேதி கோவை ​ அவிநாசி நெடுஞ்சாலையில் உள்ள ஜென்னி கிளப் தனியார் விடுதி கழிவுத் தொட்டி சுத்திகரிக்கும் பணியை, கோவை இராமநாதபுரம் சிந்தாமணி அருகேயுள்ள காமராஜபுரம் அசோக் (த/பெ. ராஜாமணி), கார்த்திக் (த/பெ. அய்யாசாமி) மற்றும் ஆனந்த் (த/பெ. கிருஷ்ணன்) ஆகிய மூன்று இளைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தொட்டியின் அடியில் தங்கியிருந்த கழிவுகளை அகற்ற கீழே இறங்கி சுத்தம் செய்ய அவர்களை பணிக்கு அமர்த்திய ஒப்பந்த நிறுவனங்களான குமரன் எண்டர்பிரைசஸ் மற்றும் சாய்ராம் எண்டர்பிரைசஸ் நிறுவனங்களால் வற்புறுத்தப்பட்டனர். முதலில் இறங்கிய கார்த்திக் மயக்கமுற்று இருந்த நிலையில் அவரைத் தொடர்ந்து கீழே இறங்கிய அசோக்கும், ஆனந்தும் மயக்கமடைந்தனர். தகவலின் பேரில் வந்த தீயணைப்புத் துறையினர் மீட்டபோது அம்மூவரும் உயிரிழந்துள்ளனர்.

சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் நடத்திய மறியலைத் தொடர்ந்து ஊரக தொழிற்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் இவர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பலியான மூவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியலிருந்து ரூ. 3 லட்சம் வழங்க அரசிற்கு பரிந்துரை செய்வதாகவும், குமரன் எண்டர்பிரைசஸ், சாய்ராம் எண்டர்பிரைசஸ் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.

உயிரிழந்த மூன்று அப்பாவி அருந்ததியர் இளைஞர்கள் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை. தேர்தல் விதிமுறை இதற்கு தடையாக இருக்காது.  இந்திய கிரிக்கெட் அணிக்கும், தமிழக வீரருக்கும் பரிசாக வழங்கியது போல் மேற்கண்ட மூவர் குடும்பத்திற்கும் நட்டஈட்டுத் தொகையை வழங்கிட கோருகிறேன்.

பாதிப்பிற்குள்ளான அக்குடும்பங்கள் தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு அவ்விளைஞர்களையே நம்பியிருப்பவை. எனவே தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு அக்குடும்பத்திற்கு தமிழக முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 3 லட்சம் வழங்கிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கிடிதத்தில் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்