முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் தி.மு.க.வினரின் வெறியாட்டம்

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

திருமங்கலம்,மே.14 - தேர்தல் தோல்வி காரணமாக வெகுண்டு எழுந்த தி.மு.க.வினர் திருமங்கலம் நகரில் 4 பஸ்களின் கண்ணாடிகளை உடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இவ்வாறு வெறியாட்டம் நடத்திய தி.மு.க.வினரில் 2 பேர் சிக்கினர். 

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்ற பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதையடுத்து கடந்த 5 ஆண்டு கால தி.மு.க.வின் அவல ஆட்சி ஓரங்கட்டப்பட்டு தமிழகத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் புதிய ஆட்சி மலர்ந்தது. 

இந்நிலையில் தி.மு.க.வை சார்ந்த சபாநாயகர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் தோல்வியை தழுவினர். இந்த தோல்வியை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க.வினர் திருமங்கலம் நகரில் வன்முறையில் இறங்கினர். நேற்று மதியம் சுமார் ஒன்றரை மணியளவில் டூவீலரில் வந்த 3 பேர் திருமங்கலம் பஸ் நிலையம் முன்பு நின்றிருந்த 2 அரசு பேருந்துகள், ஒரு தனியார் பேருந்து மற்றும் தாழ்தள சொகுசு பேருந்து மீது சரமாரியாக கற்களை வீசி விட்டு தப்பிச் சென்றனர். 

இது பற்றி தகவலறிந்த சி.ஐ.ஜி. சந்தீப் மித்தல்,  ஐ.ஜி.(பொறுப்பு) கண்ணப்பன், எஸ்.பி. அஸ்ராகார்க், திருமங்கலம் டி.எஸ்.பி. முருகேசன் ஆகியோர் அதிரடிப் படையுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமாக டூவீலரில் சென்ற மூன்று பேரை சம்பவ பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படை வீரர்கள் ஜெய்சங்கர், ஜாபர்சாதிக், நாகராஜன் ஆகியோர் விடாமல் துரத்தி சென்று திருமங்கலம் அரசு மருத்துவமனை அருகில் மடக்கிப் பிடித்தனர். 

இதில் ஒருவர் தப்பி ஓடி விடவே மற்ற இரண்டு பேரும் கையும் களவுமாக சிக்கிக் கொண்டனர். இதையடுத்து பிடிபட்ட இருவரும் திருமங்கலம் நகர காவல் நிலையம் கொண்டு வரப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதில் திருமங்கலத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரும் ஒருவர். தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் திருமங்கலம் நகரில் பஸ்களின் கண்ணாடியை உடைத்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்