முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெற்றி பெற ஐ.பி.எல். அனுபவம் கைகொடுக்கும்: டோனி

சனிக்கிழமை, 15 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

டாக்கா, மார்ச். 16 - 20 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற ஐ.பி.எல். போட்டி அனுபவம் கைகொடுக்கும் என்று கேப்டன் தோனி நம்பிக்கை தெரிவித்தார். 

டி _ 20 உலகக் கோப்பையில் பங்கேற்க இந்திய அணி தோனி தலைமையில் நேற்று முன் தினம் வங்கதேசம் சென்றடைந்தது. 

இந்தியா தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் வரும் 21 ம் தேதி மோதுகிறது. முன்னதாக 17 மற்றும் 19 _ம் தேதிகளில் இலங்கை, இங்கிலாந்துடன் பயிற்சி ஆட்டத்தில் மோத உள்ளது. 

வங்கதேச தலைநகரான டாக்கா சென்றடைந்த பிறகு, இந்திய கேப்டன் தோனி உலகக் கோப்பை குறித்து அளித்த பேட்டி வருமாறு _ 

நாங்கள் நிறைய 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறோம். ஆனால் அது சர்வதேச போட்டிகளாக இல்லையே என்று நீங்கள் சொல்லலாம். 

அணியில் இடம் பெற்றுள்ள எல்லா வீரர்களும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்டிகளில் ஆடியிருக்கிறார்கள். 

ஐ.பி.எல். போட்டி சர்வதேச தரம் வாய்ந்தது மட்டுமின்றி அதில் உலகின் தலைசிறந்த வீரர்களுடன் விளையாடி உள்ளோம். 

எனவே ஐ.பி.எல். அனுபவம் எங்களுக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும். இதே போல் சீதோஷ்ணநிலை இந்தியாவை போன்றே இருக்கும். 

அங்குள்ள ஆடுகளத் தன்மை பற்றி நன்கு தெரியும் என்பதால் அது பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.  

உலகக் கோப்பைக்கு முன்பாக 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளோம். பயிற்சி ஆட்டங்களில் எல்லா வீரர்களையும் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்போம். 

அணியில் இடம் பிடித்துள்ள அனைவரையும் ஆட வைப்பதன் மூலம் எது சிறந்த வெற்றி கூட்டணி என்பதை அறிய வாய்ப்பு கிடைக்கும். 

கடந்த உலகக் கோப்பையில் நாங்கள் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோற்றோம். ஆனாலும் போட்டியை விட்டு வெளியேற நேரிட்டது. 

எனவே இந்த உலகக் கோப்பையில் ஒவ்வொரு ஆட்டங்களும் எங்களுக்கு முக்கியமானது. இவ்வாறு தோனி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்