முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1.65 லட்சம் என்ஜினியரிங் விண்ணப்பங்கள் விற்பனை

புதன்கிழமை, 1 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன், 1 - தமிழகத்தில் உள்ள அரசு, சுயநிதி என்ஜினியரிங் கல்லூரிகளில் கவுன்சிலிங் மூலம் சேருவதற்கான விண்ணப்பங்கள்  விற்பனை கடந்த 16ம் தேதி துவங்கியது. விண்ணப்பங்கள் வாங்குவதற்கு நேற்று கடைசி நாளாகும். இதுவரை மொத்தம் 1 லட்சத்து 65 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க ஜூன் 3ம் தேதி கடைசி நாள் என்றும், ரேங்க் லிஸ்ட் 24ம் தேதி வெளியிடப்படும் என்றும் மன்னர் ஜவகர் கூறினார்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர்ஜவகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் 488  உள்ளன. இவைகளில் உள்ள 1,20,000 இடங்களுக்கு ஒற்றை சாளர முறை மூலம் கவுன்சிலிங் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் பணிகள் துவங்கியுள்ளன. இதற்கான  விண்ணப்பங்கள் விற்பனை  கடந்த மே மாதம் 16ம் தேதியன்று துவங்கப்பட்டது. 

என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதிலும் 62 மையங்களில் விற்கப்பட்டது. சென்னையில் 5 மையங்களில் விற்பனை செய்யப்பட்டது. முதலில்  2,30,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டது. இதன் தேவை மேலும் அதிகரித்ததால், மேலும், 20 ஆயிரம் விண்ணப்பங்கள் கூடுதலாக அச்சடிக்கப்பட்டது. 

இந்த ஆண்டு, 1,20,000 இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்படும்.  மேலும் சில கல்லூரிகள் புதிதாக துவங்கப்படுவதால் கடந்த ஆண்டைக்காட்டிலும் இவ்வாண்டு கூடுதலாக  இடங்கள் அதிகரிக்கும். இதுபற்றி ஜூன் 20ம் தேதிக்கு பின்னரே தெரியவரும். அப்படி அதிகரிக்குமானால், கூடுதலாக 30 ஆயிரம் இடங்கள் கிடைக்கும்.

விண்ணப்பங்கள் விற்பனை இன்று(நேற்று) மாலையுடன் முடிவடைந்துவிட்டது. இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க ஜூன் 3ம் தேதி கடைசி நாளாகும். வெளியூர்களில் இருந்து போஸ்டல் மூலம் அனுப்புபவர்கள் ஜூன் 3ம் தேதியன்று போஸ்ட் செய்திருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஜூன் 20ம் தேதியன்று ரேண்டம் எண்கள் வெளியிடப்படும். ஜூன் 24ம் தேதியன்று ரேங்க் லிஸ்ட் வெளியிடப்படும். ஜூன் 20ம் தேதிக்கு பிறகே, கவுன்சிலிங் தேதி குறித்து தெரியவரும்.

இவ்வாறு மன்னர்ஜவகர் கூறினார். 

அதே போல் தமிழ்நாட்டில் 17 அரசு மருத்துவ கல்லூரிகளும், ஒரு பல் மருத்துவ கல்லூரியும் உள்ளன. இதில் மருத்துவ கல்லூரியில் 1,653 இடங்களுக்கும், பல் மருத்துவ கல்லூரியில் 85 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பங்கள்  விற்பனை கடந்த 16ம் தேதியன்று துவங்கி நடைபெற்று வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூன் 2​ந்தேதி மாலை 5 மணி ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்