முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைஞர் டி.வி. பரிவர்த்தனை தயாளு அம்மாளுக்கு தெரியும்

செவ்வாய்க்கிழமை, 29 ஏப்ரல் 2014      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.30 - 2ஜிஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி கைமாறிய விவகாரம் மற்றும் பண பரிவர்த்தனைகள் குறித்து கருணாநிதியின் துணைவியார தயாளு அம்மாளுக்கு தெரியும் என்று அமலாக்கப்பிரிவு திடுக்கிடும் தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய இமாலய ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழலாகும். இந்த ஊழல் விவகாரம் வெளியானதை அடுத்து அப்போதைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா முதலில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த ஊழலின் ஒரு பகுதியாக கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி கைமாறிய விவகாரமும் பின்னாளில் அம்பலமானது. கலைஞர் டி.வி.யில் தயாளு அம்மாள், கனிமொழி, சரத்குமார் ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளனர். இவர்களில் தயாளு அம்மாளுக்குத்தான் 60 சதவீத பங்குகள் உள்ளன. கனிமொழிக்கு 20 சதவீத பங்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த டி.வி.க்கு பணம் கைமாறியது தொடர்பாக கனிமொழியும் கைது செய்யப்பட்டு அதே திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 7 மாதங்கள் கழித்து கனிமொழி நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார். அதன் பிறகு படிப்படியாக இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருமே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 

இந்தநிலையில் கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி கைமாறியது, மற்றும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், தயாளு அம்மாள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினார்கள். உடல்நிலையை காரணம் காட்டி நேரில் ஆஜராக தயாளு மறுத்ததால் அதிகாரிகளே நேரில் வந்து அவரிடம் விசாரணை நடத்திவிட்டுச் சென்றனர். பிறகு 4 ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை சி.பி.ஐ.சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப்பத்திரிகையில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள், அமிர்தம் உள்பட 10 பேரின் பெயர்களும் கலைஞர் டி.வி. உள்ளிட்ட சில நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு 3 ஆண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இ

இந்நிலையில் 60 சதவீத பங்குகளை வைத்திருக்கும் தயாளு அம்மாளுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் அவர் அந்த டி.வி.யின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றாலும் அந்த டி.வி.க்கு ரூ.214 கோடி கைமாறியது மற்றும் பணபரிவர்த்தனைகள் அனைத்தும் தயாளுக்கு தெரியும். அவருக்கு தெரிந்தே நடந்திருக்கிறது என்று அமலாக்கப்பிரிவு திடுக்கிடும் தகவலை வெளிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்