முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அரசு அனுமதி தேவையில்லை!

செவ்வாய்க்கிழமை, 6 மே 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,மே.7 - ஊழல் அதிகாரிகளை விசாரிக்க சிபிஐ அமைப்பு மத்திய அரசிடம் முன் அனுமதி பெற தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஊழல் குற்றம்சாட்டப்பட்ட உயர் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ள சிபிஐ போன்ற அமைப்புகள் அரசு முன் அனுமதி பெற வேண்டும் என்ற டெல்லி சிறப்பு போலீஸ் சட்டப் பிரிவு 6-ஏ-வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

பாஜகவின் சுப்ரமணிய சுவாமி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, ஏ.கே.பட்நாயக், எஸ்.கே.முகோபாத்யாயா, தீபக் மிஸ்ரா, இப்ரஹிம் கலிபுல்லா அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு மனு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளதாவது:- இந்த சட்டப்பிரிவு செல்லத்தக்கதல்ல. இச்சட்டம் இணைச் செயலாளர் மற்றும் அதற்கும் மேல் உள்ள பதவிகளை வகிக்கும் உயர் அதிகாரிகள் ஊழல் செய்திருந்தாலும் அவர்களை பாதுகாக்கும் வகையில் உள்ளது. உயர் அதிகாரிகள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுக்கு இத்தகைய பாதுகாப்பு தேவையில்லை.

மத்திய அரசில் இணைச் செயலர் தகுதி அளவிலான பணியில் இருப்பவர்கள் இச்சட்டத்தால் பயன் பெறுகின்றனர். ஆனால் மாநில அரசில் பணி புரியும் அதிகாரிகளுக்கு இத்தகைய சலுகை இல்லை. ஊழல் தடுப்புச் சட்டம் ஊழலை ஒழிப்பதற்காகவே உள்ளது. அப்படி இருக்க இது போன்ற சட்டங்களால் ஊழல் அதிகாரிகளை பாதுகாகக் தேவையில்லை.

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் உயர் அதிகாரிகள், கடை நிலை அதிகாரிகள் என பேதம் பார்க்கத் தேவையில்லை.

எனவே, இணைச்செயலாளர், அதற்கு மேலான அதிகாரிகளை விசாரிக்க அரசு அனுமதி தேவையில்லை. மத்திய அரசின் அனுமதியின்றி சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கலாம்  இவ்வாறு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்