முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலக முதல்வர் வலியுறுத்தல்

புதன்கிழமை, 15 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி,ஜூன்.15 - பாராளுமன்ற தேர்தலில் மோசடி செய்து வெற்றிபெற்ற மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். கடந்த 2009-ம் ஆண்டு லோக்சபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பாக தற்போது மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரம் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பாக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் போட்டியிட்டார். தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது ஆரம்பத்தில் இருந்தே ராஜ கண்ணப்பன் முன்னிலையில் இருந்தார். கடைசி நேரத்தில் ப.சிதம்பரம் வெற்றிபெற்றார் என்று அறிவிக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் இருந்து முன்னிலையில் வந்த ராஜ கண்ணப்பன் தோல்வி அடைந்தார் என்றும் ஓட்டு எண்ணிக்கையில் பின்தங்கியிருந்த ப.சிதம்பரம் வெற்றிபெற்றார் என்று அறிவித்ததும் ஏதோ மோசடி நடந்திருக்கலாம் என்று மக்கள் பேசிக்கொண்டனர். 

இந்தநிலையில் முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றபின்பு நேற்று முதன் முதலாக டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் கடந்த லோக்சபை தேர்தலில் போட்டியிட்ட ப.சிதம்பரம் மோசடியான முறையில் வெற்றிபெற்று பாராளுமன்றத்திற்கு வந்துள்ளார். அதனால் அவர் மத்திய அமைச்சராக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ப.சிதம்பரம் உடனடியாக மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். அமைச்சர் சிதம்பரத்தின் வெற்றியானது மோசடியால்தான் என்று அ.தி.மு.க. எப்போதும் கருதுகிறது. அதனால் அவர் மத்திய அமைச்சராக நீடிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. கடந்த 2009 லோக்சபை தேர்தலில் ப.சிதம்பரம் தேர்ந்தெடுக்கப்படவே இல்லை. தேசத்தின் சார்பாக அவர் மோசடி விளையாட்டு விளையாடியுள்ளார். தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளர்தான் வெற்றிபெற்றார் என்று இதுகுறித்து நிருபர்கள் திரும்ப திரும்ப கேள்வி கேட்டதற்கு ஜெயலலிதா பதில் அளித்தார். ஓட்டுக்களை பதிவு செய்பவர் செய்த பித்தலாட்டம் காரணமாக ப.சிதம்பரம் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்