முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணைகளிலிருந்து பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.19 - தமிழகத்தில் உள்ள அமராவதி, கிருஷ்ணகிரி, பாபநாசம் உள்ளிட்ட  5 முக்கிய அணைகளிலிருந்து பாசனத்துக்காக இன்று தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து அமராவதி பழைய வாய்க்கால் பாசன அமைப்பின்கீழ் உள்ள பாசன சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடுமாறு திருப்பூர் மாவட்ட வேளாண் பெருங்குடிமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களின் வேண்டுகோளினை ஏற்று, அமராவதி அணையிலிருந்து அமராவதி பழைய வாய்க்கால் பாசன அமைப்பின் கீழுள்ள பாசன சாகுபடிக்காக இன்று (19ந்தேதி) முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால் திருப்பூர் மாவட்டம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டம், பழைய வாய்க்கால் பாசன அமைப்பின்கீழ் உள்ள 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் பெருங்குடிமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களின் வேண்டுகோளினை ஏற்று, முதல்போக பாசனத்திற்காக இன்று 19.6.11 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9,012 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலார் மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய் மற்றும் திருநெல்வேலி கால்வாய் பாசன அமைப்புகளின்கீழ் கார் சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடக்கோரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டவேளாண் பெருங்குடிமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களின் வேண்டுகோளினையும் ஏற்று, பாபநாசம், சேர்வலார், மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து கோடகன் கால்வாய், பாளையங் கால்வாய் மற்றும் திருநெல்வேலி கால்வாய் பாசன அமைப்புகளின் கீழுள்ள பாசன நிலங்களின் கார் சாகுபடிக்காக இன்று  19.6.11 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை வட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை வட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டத்தில், கோடகன் கால்வாய்  பாளையங்கால்வாய் மற்றும் திருநெல்வேலி கால்வாய் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்