புதுடெல்லி, ஜூலை.3 - டெல்லியிருந்து மும்பை சென்ற விமானம் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த விமானம் மீண்டும் டெல்லி விமான நிலையத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று காலை 8.50 மணிக்கு கிங்பிஷர் என்ற தனியார் கம்பெனியின் விமானம் ஒன்று மும்பைக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 118 பயணிகளும் 8 விமான சிப்பந்திகளும் இருந்தனர்.
புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானத்தில் ஏதோ கோளாறு இருக்கிறது என்பதை எச்சரிக்கை கருவி ஒன்று விமானிக்கு சுட்டிக்காட்டியது. இதனால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அந்த விமானத்தை மீண்டும் டெல்லி விமான நிலையத்திலேயே தரையிறக்க விமான திட்டமிட்டார்.
அதற்கான அனுமதியை பெற விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடம் அவர் விவரத்தை கூறினார். இதை அடுத்து அந்த விமானம் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது.
இதை அடுத்து அந்த விமானம் காலை 9.08 மணிக்கு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. அதில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பிறகு அந்த விமானம் அதன் சொந்த பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டது.
பிறகு அந்த விமானத்தில் செல்ல வேண்டிய பயணிகள் அனைவரும் வேறு விமானத்தில் மும்பை அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த அவசர தரையிறக்கத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.