முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சியில் பெண்ணை தாக்கிய தி.மு.க செயலாளர் கைது

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி,ஜூலை.15 - திருச்சியில் பெண்ணை தாக்கிய தி.மு.க செயலாளரை போலிசார் நேற்று கைது செய்தனர். திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமமாலினி(37), இவரது கணவர் ஜெயசீலன். ஹேமமாலினி நேற்று முன்தினம் திருச்சி கோட்டை போலிசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் ஜெயசீலன் மெக்கானிக் பட்டறை நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. எனவே, மலைக்கோட்டை பகுதி தி.மு.க செயலாளர் மதிவாணனிடம் பணம் கடனாக வாங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டு ஜெயசீலன் இறந்து விட்டார். இதையடுத்து ஜெயசீலனின் மெக்கானிக் பட்டறையை மதிவாணன் தரப்பினர் அபகிரித்து கொண்டனர். தற்போது மதிவாணன் தரப்பினரை சந்தித்து தன் கணவர் வாங்கிய கடன் தொகையை திருப்பி கொடுத்து விடுவதாகவும், மெக்கானிக் பட்டறையை மீண்டும் கொடுத்து விடுமாறும் கூறியுள்ளார். மெக்கானிக் பட்டறையை திருப்பி கொடுக்க விரும்பாத மதிவாணன் தரப்பினர் ஹேமமாலினியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து திருப்பி அனுப்பியதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் பேரில் திருச்சி கோட்டை இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன் வழக்கு பதிவு செய்து நேற்று அதிகாலை மதிவாணனை கைது செய்தார். பின்னர் ஜே.எம்.1 நீதிமன்ற நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் ஆஜர்படுத்தினார். மதிவாணனை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து மதிவாணன் சிறையிலடைக்கப்பட்டார். தமிழகத்தில் நிலம் அபகரிப்பு மற்றும் மோசடி வழக்கில் பல தி.மு.க வினர் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் திருச்சியில் தி.மு.க முக்கிய பிரமுகர் கைது செய்யப்பட்டது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்