முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மசாஜ் கிளப் போர்வையில் விபச்சாரம் - உரிமையாளர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.17 - சென்னை மாநகரில் மசாஜ் கிளப் மற்றும் ஆயுர்வேத மசாஜ் சிகிச்சை என்ற பெயரில் பல இடங்களில் கவர்ச்சிகரமாக விளம்பரபடுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து மயக்கி பாலியல் தொழில் செய்வதை தடுக்க துரித நடவடிக்கை எடுக்கவும், அப்பாவி இளம்பெண்களை மீட்கவும், சென்னை காவல் ஆணையாளர் திரிபாதி மற்றும் காவல் கூடுதல் ஆணையாளர் அபய் குமார்சிங் உத்தரவிட்டனர்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் ராதிகா மற்றும் கூடுதல் துணை ஆணையாளர் டாக்டர் எம்.சுதாகர் அறிவுரையின்படி, சென்னை விபச்சார தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர் எம்,கிங்ஸ்லின் மேற்பார்வையில் ஆய்வாளர் எஸ்.சாண்டியாகோ தலைமையில் தனிப்படை போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சென்னை ஆற்காடு ரோடு வளசரவாக்கம் நகராட்சி அலுவலகம் அருகில் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இப்போது கேரளாவை சேர்ந்த பாஸ் என்ற நபர் மாறுவேடத்தில் இருந்த போலீசாரை  அணுகி ஆலப்பாக்கம் ஸ்ரீதேவி நகர் மெயின்ரோட்டில் நேச்சுரல் பியூட்டி என்ற பெயரில் மசாஜ் கிளப் இருப்பதாகவும், அங்கு ஆயுர்வேத மசாஜ் செய்யலாம் என்றும் மேலும் விருப்பப்பட்டால் அங்கு மசாஜ் செய்யும் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் அதற்கு ரூ.3000 மற்றும் 5000 செலவாகும் என்றும் சொல்லி ஒரு ஆட்டோவில் மாறுவேடத்தில் இருந்த போலீசை அழைத்து சென்றுள்ளார். அவர்களை பின்தொடர்ந்து சென்ற விபச்சார தடுப்பு பிரிவு போலீஸ் படையினர் மேற்படி வீட்டில் மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதை உறுதிசெய்த பிறகு அதிரடியாக அந்த வீட்டில் புகுந்து மசாஜ் கிளப் நடத்தி வந்த கேரளாவை சேர்ந்த மஞ்சு (28) என்பவரை கைது செய்தனர். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கேரளாவை சேர்ந்த 3 இளம் அழகிகளை மீட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மஞ்சுவுக்கு உடந்தையாக இருந்த கேரளாவை சேர்ந்த பாஸ் மற்றும் சிவா (எ) சிவகுமார் என்பவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளி மஞ்சு பெருநகர குற்றவியல் நடுவர், சைதாப்பேட்டை முன்பு ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி புழல் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட இளம் அழகிகள் அனைவரும் மைலாப்பூர் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்கள்.

பியூட்டி பார்லர் போர்வையில் சென்னையில் விபச்சார விடுதி நடத்தி பெண் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். 3 இளம் பெண்களை போலீசார் மீட்டனர். புரோக்கர்கள் இருவர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்