முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகன்மோகன் ரெட்டியிடம் சி.பி.ஐ. விசாரணை

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

நகரி, ஜூலை 19 - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திரமாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டியின் மகனுமான ஜெகன்மோகன் ரெட்டியிடம் சொத்துக் குவிப்பு பற்றி சி.பி.ஐ. விசாரணை செய்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

ஆந்திர நெசவுத்துறை மந்திரி சங்கர்ராவ் ஐதராபாத் கோர்ட்டில் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்துக் குவிப்பு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி சி.பி.ஐ. இயக்குனர் லட்சுமிநாராயணன் தலைமையில் ஜெகன்மோகன்ரெட்டி மீதான சொத்து குவிப்பு பற்றி விசாரித்து வருகிறார்கள். அவர்கள் முதல் கட்டமாக ஜெகன்மோகன் ரெட்டியின் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள 15 தொழில் அதிபர்களிடம் விசாரணை செய்ய உள்ளனர். இதற்காக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதில் 48 மணி நேரத்திற்குள் சி.பி.ஐ. அலுவலகத்தில் அவர்கள் ஆஜராகும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் நேற்று அவர்கள் 15 பேரும் சி.பி.ஐ. அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கமளித்தார்கள். அப்போது அவர்களிடம் ராஜசேகரரெட்டி முதல்வராக இருந்தபோது அவரால் ஆதாயம் எதுவும் பெற்றுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள்.  அவர்களது நிறுவனங்களுக்கும் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிக்க இருக்கிறார்கள். ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்துக் குவிப்பு வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் மும்முரமாக உள்ளனர். விரைவில் ஜெகன்மோகன் ரெட்டியிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த இருப்பதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று காலை கர்னூல் மாவட்டத்தில் தமது ஆறுதல் யாத்திரையை தொடங்கினார். அவர் இந்த மாவட்டத்தில் 13 நாட்களில் 1339 கிலோமீட்டர் தூரம் யாத்திரை செய்து 36 குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கிறார். 200 க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டங்களில் ஜெகன் மோகன் பேசுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்