முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடத்தை சரியில்லாத கணவனை கூலிப்படை ஏவி கொன்ற மனைவி

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.22 - சென்னை வடபழனியில் கணவனின் நடத்தை பிடிக்காததால் கூலிப்படை ஏவி கணவனை கொன்றதாக போலீசில் சரணடைந்த மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதுபற்றிய விபரம் வருமாறு:- சென்னை வடபழனி வ.உ.சி. 1-வது தெருவில் உள்ள அபார்ட்மெண்டில் வசித்து வருபவர் பிரசன்னா (45). இவரது மனைவி உமா மகேஸ்வரி (40). இவர்களுக்கு ஐஸ்வர்யா (16) என்ற மகளும் ஆகாஷ் (13) என்ற மகனும் உள்ளனர்.

பிரசன்னா பழைய சினிமா நடிகர் நம்பி என்பவரின் மகன் ஆவார். பிரசன்னா ஆரம்பத்தில் நன்றாக சம்பாதித்து வ.உ.சி. தெருவில் பிளாட், மகளுக்கு மனைவிக்கு ஏராளமான நகைகள் வாங்கி உள்ளார். இவர்களுக்கு பூர்வீக நிலம் ரூ.5 கோடி மதிப்பில் இருந்துள்ளது.

இந்நிலையில் பிரசன்னா சுகுணா சிக்கன் சென்டர் என்ற கோழிக்கடையும் கவரிங் நகைகள் வியாபாரமும் செய்து வந்துள்ளார். இடையில் வியாபாரம் நொடிந்து போகவே அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்துள்ளார்.

இடையில் பிரசன்னாவிற்கு தகாத நட்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சினிமா தொடர்பு உள்ள பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பெண்களுடன் தவறான சகவாசமும் ஏற்பட்டுள்ளது. தவறான சகவாசத்தால் சேமித்த சேமிப்புகளை அழிக்க துவங்கியுள்ளார்.

இந்நிலையில் தனது பூர்வீக நிலத்தை ரூ.5 கோடிக்கு விற்று அந்த பணத்தையும் அழித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இதற்கிடையே தீராத பெண் சகவாசத்தால் மகளுடைய நகைகளை விற்று அழித்துவிட்டு குடியிருக்கும் வீட்டையும் விற்க முயற்சித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரசன்னா மனைவியை அடித்து உதைத்துள்ளார்.

இனியும் கணவனை விட்டால் தன்னையும் பிள்ளைகளையும் நடுத்தெருவில் கொண்டுவந்து விட்டுவிடுவான் என்று மனம்புழுங்கிய உமாமகாஸ்வரி தாம்பரத்தில் உள்ள தனது தாய் மாமன் சம்பத் என்பவரிடம் தான் படும் கஷ்டங்களை கூறி தன் கணவனை ஒழித்துக்கட்டினால்தான், தான் நிம்மதியாக இருக்க முடியும் என்று கூறியுள்ளார்.

இதன்பேரில் சம்பத்தும் உமாமகேஸ்வரியும் இணைந்து திட்டம் தீட்டியுள்ளனர். இதனடிப்படையில் நேற்று முன்தினம் இரவு கொலை செய்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டது.

இதன்படி நேற்று முன்தினம் இரவு உமாமகேஸ்வரியும் அவரது பிள்ளைகளும் தனியறையில் படுத்துகிடந்தனர். நள்ளிரவு திட்டமிட்டபடி சம்பத் இரண்டு நபர்களுடன் உமாமகேஸ்வரி வீட்டுக்கு வந்து தொலைபேசியில் உமாமகேஸ்வரியிடம் தொடர்பு கொண்டுள்ளார். உமாமகேஸ்வரி கதவை திறந்துவிட்டு ஒன்றுமறியாததுபோல் தனது அறையில் சென்று படுத்துக்கொண்டார்.

சம்பத்தும் இரண்டு அடியாட்களும் பிரசன்னாவின் அறைக்குள் சத்தமில்லாமல் நுழைந்து பிரசன்னாவை கடுமையாக தாக்கி மயக்கமடைய வைத்துள்ளனர். பின்பு பிரசன்னாவை வெளியே தூக்கி செல்ல திட்டமிட்டு வெளியே தூக்கி வந்துள்ளனர். வாசலில் படிக்கட்டு அருகே அபார்ட்மெண்ட் முழுமைக்கும் சப்ளையாகும் மின்சாரம் மெயின்பாக்ஸ் இருந்துள்ளது. உடலை பிரசன்னாவை கீழே படுக்க வைத்த சம்பத் கும்பல் அவர் உடலில் மின்சார ஒயரை சுற்றி அந்த ஒயரை மின்சார பெட்டியுடன் இணைத்து மின்சாரத்தை பாய்ச்சியுள்ளனர். இதனால் சில நிமிடங்களில் பிரசன்னா காதில் மூக்கில் ரத்தம் வழிய இறந்துபோனார்.

உடனே அவர் உடலை அங்கேயே போட்டுவிட்டு சம்பத் கும்பல் ஓடிவிட்டது. காலையில் எழுந்துவந்து தனது கணவரின் பிணத்தை பார்த்த உமாமகேஸ்வரி உடனடியாக போலீசில் சரணடைய எண்ணி தனக்கு தெரிந்த 121-வது வார்டு கவுன்சிலர் புஷ்பரூத் என்பவரிடம் உண்மையை சொல்லி அவர் மூலம் வடபழனி காவல் நிலையத்தில் நேற்று காலை சரணடைந்தார்.

சென்னையில் மனைவியே கணவனை ஆள் வைத்து கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தனது கணவனை கொன்றது பற்றி வாக்குமூலம் அளித்துள்ள உமாமகேஸ்வரி, தனது கணவன் தவறான சகவாசத்தால் துணை நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க குடும்ப சொத்தை விற்று அழித்ததாகவும் மேலும் மேலும் நகைகளை விற்றதாகவும் கடைசியாக குடியிருக்கும் வீட்டையே விற்க முயற்சித்தபோது பிள்ளைகள் எதிர்காலம் கருதி தான் தடுத்தபோது தன்னை அடித்து சித்ரவதை செய்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் தவறான பழக்கத்தால் சைக்கோ போல்  நடந்து கொண்டதாகவும் விபச்சார அழகிகளை வீட்டுக்கே அழைத்து வந்து உல்லாசமாக இருந்ததாகவும் இதேபோல் பல பெண்கள் கணவனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தனது நடவடிக்கை ஆறுதலாகவும் கொடுமைக்கார கணவன்களுக்கு பாடமாகவும் அமையும் என்று உமாமகேஸ்வரி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இந்த கொலையில் தப்பி ஓடிய தாம்பரம் சம்பத்  கூட்டாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்