முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. அறிவித்த போராட்டம் பிசுபிசுத்தது வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட்டன

சனிக்கிழமை, 30 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை.- 30 - சமச்சீர் கல்வி தொடர்பாக தி.மு.க. அறிவித்து நேற்று நடத்திய போராட்டம் பிசுபிசுத்தது. மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டன. தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரமானதாக இல்லை, இதனை மேலும் செம்மைப்படுத்தவேண்டும் என அ.தி.மு.க. அரசு கூறி வருகிறது. இதற்கிடையில் சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமச்சீர் கல்வியை அமல் படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அறப்போர் கிளர்ச்சி நடைபெறும் என்று தி.மு.க. அறிவித்து இருந்தது.  இதில் பங்கேற்கும் வகையில் மாணவர்களும், ஆசிரியர்களும் வகுப்புகளை புறக்கணிக்க வேண்டும். போராட்டத்தில் பெற்றோர் உள்பட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தி.மு.க. அழைப்பு விடுத்து இருந்தது. தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணியினர் தமிழ் நாடு முழுவதும் போராட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். அதன்படி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் தமிழ்நாடு மாநில நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களும் சமச்சீர் கல்வியை ஆதரிக்கும் அதே நேரத்தில் தி.மு.க. அழைப்பு விடுத்திருக்கும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்றும், தமிழகம் முழுவதும் நர்சரி மற்றும் பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என்றும் அறிவித்திருந்தனர்.
தி.மு.க. போராட்டம் நடத்த அழைப்பு விட்டிருந்தபோதிலும், மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிக் கூடங்களும் வழக்கம் போல் இயங்கின. மாணவ ​ மாணவிகள் பள்ளிக்கு சென்றனர். ஆசிரியர்கள்​ ஊழியர்கள் தங்கள் பணியில் ஈடுபட்டனர். சென்னையில் அனைத்து  பள்ளிகளிலும் மாணவர்கள் எண்ணிக்கை வழக்கம்போலவே இருந்தது. பள்ளிகளின் செயல்பாட்டில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுபோல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல இயங்கின.  
பள்ளி செல்லும் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் ஆகியோருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளின் முன்பாகவும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சென்னையில் அனைத்து பள்ளிகளுமே, சென்னை பள்ளிகள், தனியார் நர்சரி பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி  அனைத்து பள்ளிகளுமே எந்தவித இடையூறும் இன்றி நேற்று வழக்கம் போல் செயல்பட்டன. தி.மு.க. அறிவித்திருந்த போராட்டம் பிசுபிசுத்தது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்