முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு பொருளாதார தடை: இ.கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, ஆக.2 - இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் நாரா.கலைநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்கள் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் சந்திரசேகர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் டி.ராஜா எம்.பி. பங்கேற்றார். புதுவை அரசியல் நிலை, கட்டி மாநாடு நடத்துவது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. 

புதுவை அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. ரூ.4 ஆயிரத்து 440 கோடி புதுவை அரசுக்கு கடன் தொகையாக உள்ளது. இதை தள்ளுபடி செய்ய முதல்வர் பிரதமருக்கு கடிதம் கொடுத்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக அனைத்து கட்சியினரையும் கூட்டி மத்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். 

தற்போது திட்டக்குழு புதுவை மாநிலத்திற்கு, இந்த நிதி ஆண்டிற்கு ரூ.2750 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம் ஆகும். இது ஏற்புடையது அல்ல. அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 

தமிழகத்தைப் போல புதுவை சட்டசபையிலும் இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க தீர்மானம் கொண்டு வர வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்கள், வெளிமாநிலத்தில் இருந்து குடியேறிய தொழிலாளர்களை கணக்கெடுத்து அவர்கள் நலன் காக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். 

பஞ்சாலைகளை நவீனப்படுத்தி லாபத்தில் இயக்க முயற்சி எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்க அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்க முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையரை உடனடியாக நியமித்து தேர்தலை நடத்த முன்வர வேண்டும். அதில் 50 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். 

புதுவையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. ரெயில்வே திட்டங்கள் பல முடக்கப்பட்டு நிற்கிறது. இவைகளை தீர்க்க முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்த எம்.எல்.ஏ.க்களை கூட்டி விவாதிக்க வேண்டும். 

புதுவையில் பேனர் கலாச்சாரம் மீண்டும் தலை தூக்கியுள்ளது. 2002-ம் ஆண்டு நகர் புறத்ததை அழகு படுத்தும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை ஆட்சியாளர்களே மீறி நடந்து கொள்கிறார்கள். முதல்வர் ரங்கசாமி முன் உதாரணமாக இருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

விளை நிலங்களை காக்க சட்டம் கொண்டு வர வேண்டும். சமச்சீர் கல்வி பற்றி தெளிவு படுத்த வேண்டும். புதுவைக்கு தனி கல்வி வாரியம் அமைக்க வேண்டும். குற்ற நிகழ்ச்சிகள் புதுவையில் பெருகி வருகிறது. எனவே சட்டம் ஒழுங்கை சீரமைக்க தனி செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 20--வது மாநில மாநாட்டை வருகிற ஜனவரி மாதம் 6, 7, 8 ஆகிய தேதிகளில் புதுவையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்பார்கள். புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்