முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2012ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் மின்வெட்டு நீக்கப்படும்

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,அக.5 - 2012 ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் தமிழகத்தில் மின்வெட்டு முற்றிமாக நீக்கப்படும் என்று பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2011-2012 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து சில அறிவிப்புக்களை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:​

தமிழகத்தின் தற்போதைய மின் உற்பத்தி திறன் 10,237 மெகாவாட்டாக இருந்தாலும், சராசரி மின் உற்பத்தி 8000 மெகாவாட்டாகவே உள்ளது.  ஆனால் மின் தேவையோ 10,500 முதல் 11500 மெகாவாட்டாக உள்ளது.  எனவே 2500 மெகாவாட் முதல் 3500 மெகாவாட் வரை மின் தட்டுப்பாடு உள்ளது. இதனை வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குவதன் மூலமாகவும், காற்று மூலம் பெறப்படும் மின் சக்தியைப் பயன்படுத்துவதன் மூலமாகவும், காற்று மூலம் பெறப்படும் மின் சக்தியைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் மின்தடை- கட்டுப்பாட்டு நடவடிக்கை முலமாகவும் சமாளித்து வருகிறோம்.  ஊரக, நகர்புறப் பகுதிகளில் மூன்று மணி நேரமாக இருந்த மின்வெட்டு 1.7.2011 முதல் இரண்டு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.  மின்சக்தியின் உற்பத்திக்கேற்ப இந்த மின்வெட்டு படிப்படியாக தளர்த்தப்பட்டு, 2012 ஆகஸ்டு மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் முற்றிலுமாக நீக்கப்படும்.

2011-2012 ஆம் ஆண்டில் புதிய திட்டங்களால் கிடைக்கும் மின் உற்பத்தி திறன் 3280 மெகாவாட்டாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால்,  மின் விநியோகத்தில் கணிசமாக முன்னேற்றம் இருக்கும் என நம்புகிறேன். மாநில அரசு, வடசென்னை மூன்றாம் நிலை, நான்காம் நிலை உற்பத்தி, உடன்குடி, எண்ணூர் இணைப்பு,குந்தா விசை சேமிப்பு ஆகிய மின் உற்பத்தி திட்டங்கள் விரைவுபடுத்தப்படும். இத்திட்டங்கள் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் கூடுதலாக 5100 மெகாவாட் மின்சக்தி கிடைக்கும்.  2011-2012 ஆம் ஆண்டில் 4800 கோடி  ரூபாய் செலவில் 800 மெகாவாட் உடன்குடி விரிவு திட்டம், 9600 கோடி ரூபாய் செலவில் 1600 மெகாவாட் உப்பூர் அனல் மின்திட்டம், 3600 கோடி ரூபாய் செலவில் 40 ஆண்டு பழமை வாய்ந்த எண்ணூர் அனல் மின் இயந்திரத்திற்கு பதிலாக 600 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின் இயந்திரம் நிறுவும் திட்டம், 4800 கோடிரூபாய் செலவில் 800  மெகாவாட் தூத்துக்குடி நான்காம் நிலை உற்பத்தித் திட்டம் ஆகியவை தொடங்கப்படும். இதனால் அரசாலும், பல்வேறு கூட்டு முயற்சிகளாலும் மொத்தம் 22800 கோடி ரூபாய் முதலீட்டில் 3800 மெகாவாட் மின்சார உற்பத்தி கூடுதலாகக் கிடைக்கும்.

தமிழ்நாடு மின் உற்பத்திப் பகிர்மானக் கழகம் 40,000 கோடி ரூபாய் கடன் சுமையாலும், 38,000 கோடி ரூபாய் அளவிற்கான திரண்ட நட்டத்தாலும் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நிதி நிலையைச் சீராக்குவதற்கு குறுகிய கால நடவடிக்கையாக நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்கும்,  நீண்டகால அடிப்படையில் முழுமையாக நிதி நிர்வாகத்தைச்  சீரமைப்பு செய்வதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் குறிப்பாக காற்று மூலம் பெறப்படும் எரிசக்தியில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.  காற்றாலை மூலம் நிறுவப்பட்ட மொத்த உற்பத்தித் திறன் 6007 மெகாவாட் ஆகும். இது இந்தியாவில் உள்ள  மொத்த உற்பத்தித் திறனில் 47 விழுக்காடாகும். காற்று மூலமான எரிசக்தி உற்பத்தியில் முதலீடு செய்வதற்கு வதியாகவும், எரிசக்தியை மின் நிலைய இணைப்பு வரை அனுப்புவதற்குத்  தேவையான  கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். கடலோர காற்று எரிசக்தி உட்பட காற்று மூலமான மின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க இந்த அரசு உரிய நடவடிக்கைக் கண்டறியும்.

 ஆண்டுககு 20,000  தெரு விளக்குகள் வீதம் 1000 கிராமங்களில் 248 கோடி ரூபாய் செலவில் சூரிய சக்தியால் எரியும் ஒரு லட்சம் தெரு விளக்குகளை அமைக்கும் ஒரு மகத்தான திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும்.  இதில் மாநில அரசின் பங்கு 191.60 கோடி ரூபாயாகவும்,  மத்திய அரசின் மானியம் 56.40 கோடி ரூபாயாகவும் இருக்கும்.  2011-2012 ஆம் ஆண்டில் 200 கிராமங்களில் 20,000 தெரு விளக்குகள் சூரிய எரிசக்தியை பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்படும்.  இதற்கென ஆகும் செலவான 49.60 கோடி ரூபாயில் மத்திய அரசு 11.20 கோடி ரூபாயும், மாநில அரசு 38.40 கோடி ரூபாயாக பகிர்ந்த  கொள்ளும்.  இதேபோன்று 2001-2012 ஆம் ஆண்டில் சூரிய சக்தியுடன் கூடிய 60,000 பசுமை வீடுகள் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் கட்டப்படும்.  மத்திய அரசின் 48.60 கோடி ரூபாய் மானியம் உட்பட சுமார் 180 கோடி ரூபாய் செலவில் பசுமை வீடுகளுக்கு சூரிய எரிசக்தி வழங்கும் பணியினை தமிழ்நாடு எரிசக்கி மேம்பாட்டு நிறுவனம் மேற்கொள்ளும். அரசு ஏற்கனவே உறுதியளித்தவாறு பசுமை எரிசக்தியை ஊக்குவிக்க அரசு- தனியார் பங்களிப்பு முறையில் திறந்த ஒப்பந்தப்புள்ள நடைமுறைகளைப் பின்பற்றி 50 மேகாவாட் உற்பத்தித் திறன் கொணஅட சூரிய ஒளியில மின்சாரம் தயாரிக்கும் பூங்கா ஒன்றை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் அமைக்கும். இவ்வாறு பட்ஜெட்டில்  செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்