முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று சுதந்திர தினம் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக. - 15 - இன்று சுதந்திர தினவிழா கொண்டாட்டங்களை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் இந்தியா முழுவதும் பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் இரவு பகலாக ரோந்து பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் 65 வது சுதந்திரதினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன்சிங் இன்று தேசிய கொடியை ஏற்றிவைக்கிறார். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் மாநில அரசுகளுக்கு தகவல் அனுப்பியுள்ளனர். இதையடுத்து டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. டெல்லியில் பிரதமர் கொடியேற்றும் செங்கோட்டை, பாராளுமன்ற வளாகம், அமைச்சரவை அலுவலகங்கள், முக்கிய தலைவர்களின் இல்லங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலும் பல மடங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. உயரமான கட்டிடங்களில் இருந்து டெல்லி நகர் முழுவதும் 24 மணி நேரமும் டெல்லி கண்காணிக்கப்பட்டு வருகிறது. எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை டெல்லி போலீசார் எடுத்துள்ளனர். டெல்லி நகருக்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் முழுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இதேபோல மும்பை நகரிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நகரில் உள்ள 80 போலீஸ் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. மும்பையில் ஏற்கனவே தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தியிருப்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தீவிரவாத தடுப்பு போலீசார் நகர வீதிகளில் ரோந்து சுற்றி வருகின்றனர். 

ஆயுதமேந்திய போலீசார் நகர் முழுவதும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். சத்திரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ் மற்றும் ஓபராய் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர ஓட்டல்கள் ஆகியவற்றிலும் பலமடங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எந்த சம்பவம் நிகழ்ந்தாலும் அதை முறியடிக்கும் வகையில் தீவிரவாத தடுப்பு போலீஸ் படையும் உள்ளூர் போலீஸ் படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தெருக்களில் செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. சந்தைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் வெடிகுண்டு நிபுணர்கள் துருவித் துருவி சோதனையிட்டு வருகின்றனர். மோப்ப நாய்களைக் கொண்டும் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும், மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ளிட்ட அதி முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வாகனச் சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல மேற்குவங்க தலைநகர் கொல்கத்தா, கர்நாடக தலைநகர் பெங்களூர், புனே, லக்னோ உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்