முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் அமெரிக்கர் ஒருவர் கடத்தல்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஆக.- 15 - பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் துப்பாக்கி முனையில் ஒரு அமெரிக்கரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். பாகிஸ்தானில் ஜே.இ.ஆஸ்டின் அசோசியேட்ஸ் என்ற கம்பெனி ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் வளர்ச்சி பணிகள் மற்றும் அமெரிக்க உதவி பணிகள் ஆகியவற்றை செய்து வருகிறது.  இந்த கம்பெனியில்  வாரன் வீன்ஸ்டீன் என்ற அமெரிக்கர் பணியாற்றி வந்தார். இவர் இஸ்லாமாபத்தில் உள்ள தனது கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ஆனால் அவர் அடிக்கடி லாகூரில் உள்ள தனது  வீட்டிற்கு சென்று வருவது  வழக்கம். அவர் லாகூரில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த போது  பயங்கர ஆயுதங்களுடன் 12  தீவிரவாதிகள் சுற்றி வளைத்தனர்.  துப்பாக்கி ஏந்திய அந்த தீவிரவாதிகள்  அந்த அமெரிக்கரை  ஒரு வாகனத்தில் ஏற்றி கடத்திச்  சென்றனர்.

இந்த தகவலை தான் பணியாற்றும் கம்பெனியை  சேர்ந்த சக ஊழியர்களிடம் வீன்ஸ்டின் தெரிவித்தார். ஆனால் அவர் எங்கே கடத்திச் செல்லப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை. இவர் கடந்த 5 ஆண்டுகளாக லாகூரில் வசித்து வந்ததாக போலீசார்  தெரிவித்தனர்.

வீன்ஸ்டீன் கடத்தப்பட்டதை பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக  செய்தி தொடர்பாளர் ஆல்பர்ட் ரொட்ரீக்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் வெளிநாட்டுக்காரர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது  வழக்கமாக இருந்து வருகிறது.  ஆனால் இதுபோன்ற கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது  அரிதாகத்தான் இருந்து வருகிறது. ஆனால் இப்போது அமெரிக்கர் ஒருவரை  தீவிரவாதிகள் கடத்தி  சென்றுள்ளது கவலை அளிப்பதாக உள்ளது என்று லாகூர்  போலீஸ் அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

இந்த கடத்தல் குறித்து வீன்ஸ்டீன் வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும், இதில் வீன்ஸ்டீன் உதவியாளர்களுக்கும் தொடர்பு  இருக்கிறதா  என்பது குறித்தும்   விசாரணை நடத்தப்பட்டு  வருகிறது என்றும் அவர்  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்