முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல நிறுவனத்தை சேர்ந்த கடைகளில் ரெய்டு

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.19 - சென்னை தி.நகர்,புரசைவாக்கம் பகுதிகளில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனங்கள், நகைக் கடைகள், பர்னிச்சர் கடைகள் உட்பட 16 இடங்களில் வருமானவரி துறையினர் திடீரென சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, புரசைவாக்கம் ஆகிய இடங்களில் ஒரே நிறுவனத்தை சேர்ந்த ஜவுளிக் கடை, தங்க மாளிகை, நகைக் கடை, பர்னிச்சர் கடை, பாத்திரக் கடை உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் எந்நேரமும் மக்கள் கூட்டம் அலைமோதும். கடந்த 1 மாத காலமாக ஆடி மாதத்தை முன்னிட்டு ஆடித் தள்ளுபடி வியாபாரம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அங்கு பொருட்களை வாங்கி உள்ளனர். நேற்று முன்தினம் ஆடி தள்ளுபடி விற்பனை முடிவடைந்தது. 

தினமும் காலை 8 மணிக்கு இங்குள்ள கடைகள் திறக்கப்படும். நேற்று வழக்கம்போல் கடைகள் திறக்கப்பட்டபோது தி.நகர், புரசை பகுதிகளில் உள்ள இதே நிறுவனத்தை சேர்ந்த ஜவுளி கடையிலும் வருமானவரி துறையினர் அதிரடியாக நுழைந்தனர். வேலைக்காரர்களை உள்ளே அனுமதிக்காமல் கடைகளின் ஷட்டர்களை மூடி தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வரவு- செலவு புத்தகங்கள், பொருட்களை வாங்கிய வரவு-செலவு உள்ளிட்ட ஆவணங்களை வருமானவரி துறையினர் தீவிரமாக சோதித்தனர். சென்னையில் வியாசர்பாடி, தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 16 கடைகள், தனி அலுவலகம், கிடங்குகளில் 150 முதல் 200 வருமானவரி துறையினர் மேற்கண்ட சோதனையை செய்தனர்.   

இதனால் நேற்று சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் விற்பனை எதுவும் நடைபெறவில்லை. கடைகளில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் கடைகள் மூடி கிடந்ததால் குழப்பத்துடன் திரும்பி சென்றனர். நேற்று நடைபெற்ற சோதனையில் ஏராளமான ஆவணங்கள் வருமானவரி துறையினர் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பொருட்களை வாங்கியதிலும், விற்பனை செய்வதிலும் கணக்கு வழக்குகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அனுமதி இன்றி கட்டப்பட்டதாக இனங்காட்டப்பட்ட 200-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் இந்த நிறுவனத்தை சேர்ந்த கட்டிடங்கள் அதிக அளவில் உள்ளதாக கூறப்படுகிறது. 

இதேபோல் புதிதாக கட்டி தொடங்கப்பட்ட புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ்  விவகாரத்தில் சி.எம்.டி.ஏ. அனுமதியின்றி கட்டிடம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் முன்னாள் அமைச்சரின் கைங்கர்யம் உள்ளதாகவும், விரைவில் அவரிடமும் அதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்