முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடத்தப்பட்ட தேனி பொறியாளரை மீட்க கலெக்டரிடம் மனு

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

தேனி,ஆக.23 - ஓமன் கடல் பகுதியில் சோமாலிய கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்கு கப்பலில் சிக்கியுள்ள தேனி மாவட்டத்தை சேர்ந்த பொறியாளரை மீட்டு தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் மாவட்ட கலெக்டர் பழனிசாமியிடம் மனு கொடுத்தனர். தேனி மாவட்டம் தாடிசேரியை சேர்ந்தவர் ராஜன் - சாந்தி ஆகியோரது மகன் உதயராம்(27). இவர் ஆங்கிலோ ஈஸ்டர்ன் பிரைவேட் லிமிடெட் என்ற அமெரிக்க நிறுவனத்தி மும்பை கிளை மூலம் ரசயான சரக்கு கப்பலில் கெமிக்கல் டேங்கர் பொறியாளராக உள்ளார். இவருக்கு திருமணமாகவில்லை. சகோதரி ஒருவர் உள்ளார். விடுமுறையில் தாடிசேரிக்கு சென்றிருந்த உதயராம், 4 மாதங்களுக்கு முன் மீண்டும் பணிக்கு திரும்பினார். இந்த நிலையில் உதயராம் பணியில் இருந்த சரக்கு கப்பல் ஓமன் கடல் பகுதியில் சலாலா துறைமுகம் அருகே சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தி செல்லப்பட்டதாக அவரது அலுவலகத்தின் சென்னை கிளையில் இருந்து உதயராமின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாம். 

தற்போது தங்களது மகனின் நிலை குறித்து எந்த தகவலும் தெரியவில்லை என்றும், கடத்தப்பட்டதாக கூறப்படும் உதயராமை மீட்டு தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது பெற்றோர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். அப்போது அவர்களிடம் அரசுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக கலெக்டர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்