முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.- காங்கிரஸ் உறவு பணால் காங்கிரசிடம் தொடர்ந்து கெஞ்சியது அம்பலம்

ஞாயிற்றுக்கிழமை, 6 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, மார்ச் - 6  - தி.மு.க.- காங்கிரஸ் உறவு பணாலாகி இருக்கிறது. உறுதியாக இருக்கிறது,  சிறப்பாக இருக்கிறது என்றெல்லாம் பேசப்பட்டு வந்த கட்டுக்கதை வெட்டவெளிச்சமாகி முடிவுரை எழுதப்பட்டு விட்டது. 

அடுக்கடுக்கான ஊழல் புகாரால் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கும் தி.மு.க.விற்கு மேலும் ஒரு பேரிடியாக மத்திய அரசு ஆதரவின்றி தனித்து தேர்தலில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 5 ஆண்டு காலம் மைனாரிட்டி ஆட்சியாக இடதுசாரிகள், பா.ம.க. தயவு, பின்பு காங்கிரஸ் தயவுடன் காலத்தை தி.மு.க. தள்ளியபோது ``ஆட்சியில் பங்கு'' என்ற கோரிக்கையை தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் ஜால்ரா எம்.எல்.ஏ.க்களுக்கு சலுகைகள் காட்டியது மூலம் சமாளித்துவந்த கருணாநிதி ஸ்பெக்ட்ரம் விவகாரம் கிளம்பியபோது விவகாரம் பூதாகரமாக எழும் என்று எதிர்பார்க்கவில்லை. 

இந்த விவகாரத்தின் சூத்திரதாரியே ராகுல்காந்தி என்பதுதான் உண்மை. தி.மு.க.வை விட்டு காங்கிரஸ் வெளியேற வேண்டும், காங்கிரஸ் தன்னிச்சையான முடிவு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து ராகுல் காந்தி வற்புறுத்தி வந்த நிலையில் ராசா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியபோது ராசாவின் அமைச்சரவை அலுவலகத்தில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது மூலம் தி.மு.க.விற்கு காங்கிரஸ் நெருக்கடி கொடுத்தது. பின்பு மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கை மீடியாக்கள் கையில் வந்ததற்கும் காங்கிரசின் `கை' பின்னால் இருந்தது.

தொடர்ந்து தி.மு.க.- காங்கிரஸ் உள்குத்து, முட்டல், மோதல் பல்வேறு சம்பவங்களில் வெளி வந்தது. ராசாவை கைது செய்யக் கூடாது என்பதற்காக சோனியாவை சந்திக்க சென்ற கருணாநிதியை, மகன் ராகுல் வரும் வரை காக்க வைத்து பின்பு தொகுதி பற்றி ராகுலின் எண்ணப்படி 78 தொகுதிகள், ஆட்சியில் பங்கு, துணை முதல்வர், கண்ட்ரோல் கமிட்டி என அதிர வைத்து சென்னைக்கு அனுப்பி வைத்தார். 

ராசாவின் கைதும் நடந்தது. அதன் பிறகு தொகுதி பங்கீட்டுக்காக காங்கிரஸ் ஐவர் குழுவை போட்டது. இதில் சிதம்பரத்திற்கு கொம்பு சீவி அனுப்பி வைத்தனர். முதல் கட்டத்தை சாதாரணமாக கடந்த தேர்தல் அடிப்படையில் தொகுதிகளை பிரித்துக் கொள்ளலாம் என்று ஆரம்பித்த தி.மு.க. குழுவினரிடம், எடுத்தவுடனேயே 78 தொகுதிகள், ஆட்சியில் பங்கு, கண்ட்ரோல் கமிட்டி என்று சிதம்பரம் பேசியவுடன் ஆடிப்போன தி.மு.க. குழுவினர் தலைவரிடம் பேசி விட்டு கூறுகிறோம் என்று முடித்துக் கொண்டனர். 

இதுபற்றி தகவல் வெளியானபோது தங்கள் கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை என்று சப்பை கட்டு கட்டினாலும் உள்ளே குத்து வெட்டுக்கள் நடந்து கொண்டுதான் இருந்தது. மறுபுறம் தி.மு.க. தரப்பில் உளவுத்துறை மூலம் விஜயகாந்த் தனித்து நிற்கிறார் என்ற தோற்றத்தை உருவாக்கினர். ஆனால் நேற்று முன்தினம் விஜயகாந்த் போயஸ் தோட்டம் வந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து 41 தொகுதிகள் உடன்பாட்டில் கையெழுத்து போட்டார். 

ஆனால் தி.மு.க.- காங்கிரஸ் தரப்பில் பல முறை பேச்சுவார்த்தை நடந்தும் எந்தவித முன்னற்றமும் இல்லாத நிலையில் இறுதியாக காங்கிரஸ் மேலிட நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்க குலாம் நபி ஆசாத்தை, சோனியா சென்னைக்கு அனுப்பி வைத்தார். அவருடன் கருணாநிதி தனது குடும்ப ரத, கஜ, துராதிபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுதும் காங்கிரஸ் வேறு வழியில்லாமல் பணிந்து வந்து  விடும். அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி உறுதியாகி விட்டது. அதனால் காங்கிரஸ் தன்னை நம்பித்தான் இருக்க வேண்டும் என்ற தைரியத்தில் 57 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது மற்றும் வேறு கண்டிஷன்களுக்கு ஒத்துக் கொள்ள முடியாது என்று கருணாநிதி கூறி அனுப்பினார். 

ஆனால் காங்கிரசின் எண்ணம் வேறு மாதிரியாக உள்ளதாம். ஊழலில் நாறிக் கிடக்கும் தி.மு.க. படுதோல்வியை சந்திப்பது திண்ணம். இந்த நேரத்தில்  தி.மு.க.வை நெருக்கி சில முடிவெடுக்க வைக்க வேண்டும், அல்லது காங்கிரஸ் தனித்து நின்று பீகார் பாணியில் சோதனை செய்ய கூட தயார் என்ற முடிவுக்கு ராகுல் காந்தி வந்து விட்டதாக கூறப்படுகிறது. 

மறுபுறம் தி.மு.க. கலைஞர் டி.வி. விவகாரத்தில் பாகஸ்தர் என்ற முறையில் வெளிநாட்டில் இருந்து வந்த 220 கோடி ரூபாய் விவகாரத்தில் சி.பி.ஐ.யின் பிடி கனிமொழியை நோக்கி இறுகுவதால் காங்கிரஸ் கூட்டணியுடன் இருந்தால் வாய் திறக்க முடியாது. வெளியே வந்து  விட்டால் காங்கிரஸ் உறவை முறித்ததால்தான் கனிமொழியை பழி வாங்குகிறார்கள் என்று கூறி தேர்தலில் அனுதாபத்தை தேடலாம் என்ற எண்ணமும் இருந்தது. எப்படி இருந்தாலும் மத்தியில் ஆட்சி அதிகார சுகத்தில் இருந்து கொண்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற தி.மு.க.வின் எண்ணம் காங்கிரசை கெஞ்சும் அளவுக்கு கொண்டு சென்றது. அதைத்தான் விலகல் விஷயத்தில் தி.மு.க.வின் தீர்மானத்திலும் குறிப்பிட்டுள்ளனர். பலவாறாக அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஒத்துக் கொண்டு சென்றோம். ஆனாலும் அவர்கள் எங்கள் உறவை விரும்பவில்லை என்று ஒப்பாரி வைத்துள்ளார்கள். 

மார்ச் 3-ம் தேதி குலாம் நபி ஆசாத் டெல்லி சென்ற பிறகு கருணாநிதி 4-ந் தேதி ஒரு நாள் இறுதி கெடு. 5-ந் தேதி முடிவை அறிவிப்போம் என்று முடிவெடுத்தார். 

அதுவரையிலும் காங்கிரஸ் இறங்கி வரும் என்றுதான் கருணாநிதி நினைத்திருந்தார். 5-ந் தேதி உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டும் வரையிலும் வாசல் கதவை திறந்து வைத்து கொண்டு தங்கபாலுவாவது வருவாரா என்று காத்து கிடந்தார். ஆனால் 4-ந் தேதி நள்ளிரவே காங்கிரஸ் தி.மு.க.வுடன் உறவில்லை என்ற முடிவை டெல்லியில் எடுத்தது. இதையடுத்து தங்கள் நிலையை தெரிவித்து கருணாநிதி அய்யோ பாவம் என்ற நிலையில் நள்ளிரவில் ஒரு அறிக்கையும் விட்டுபார்த்தார். மறுநாள்  மதியம் வரை சிதம்பரம் வருவார், ஆசாத் வருவார் என்று காத்திருந்த கண்கள் பொய்த்துப் போனதுதான் மிச்சம். முடிவில் வேறு வழியில்லாமல் ஒரு பெரிய தீர்மானத்தை போட்டுவிட்டு விலகளை அறிவித்துள்ளனர். ஆனாலும் காங்கிரசுக்கு பிரச்சினை அடிப்படையில் ஆதரவாம். அமைச்சரவையிலிருந்து விலகலாம். எதாவது மிச்ச சொச்சம் காங்கிரஸ் அனுதாபப்பட்டு வருமா என்பதற்கு தான் இந்த வரியும். தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகியது என்று உயர்நிலை செயல் திட்டக்குழுவை கூட்டி அறிவித்தாலும் காங்கிரஸ், தான் பதில் எதுவும் தராமல் புறக்கணித்தது என்பதுதான் உண்மை. நேற்று மதியம் முதல் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசுகளுடன் காத்திருந்தனர் உறவு முடிந்தவுடன் வெடிப்பதற்காக.    

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி முறிந்ததன் மூலம் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி  பிரகாசமாகியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகப்பெரிய வெற்றியை அ.தி.மு.க. அணி பெறப் போகிறது என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். எந்த நேரத்தில் அழகிரி இந்த தேர்தலில் அ.தி.மு.க. காணாமல் போகும் என்று சொன்னாரோ அது அவர்களுக்கே வந்து வந்து விட்டது. 

தானும் கழகமும் இதுவரை இதுமாதிரியான சூழ்நிலையை சந்தித்தது இல்லையென்று தீர்மானத்தில் கருணாநிதி புலம்பியுள்ளார். உண்மைதான் இதைவிட அதிகமான அனுபவமும் இனி அவருக்கு கிட்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago