முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் வேட்பாளருக்கு போட்டியிடவில்லை சவுகான் பேட்டி

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, அக்.- 24 - பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக தான் போட்டியிட திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கூறியுள்ளார். அடுத்து நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி முன்னிலைப் படுத்தப்படலாம் என்று ஏற்கனவே கேஷ்யங்கள் வெளியாகி உள்ளன. கடந்த பொதுத் தேர்தலின்போது பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி முன்னிலைப் படுத்தப்பட்டிருந்தார். ஆனால் தற்போது நரேந்திர மோடிக்கு ஆதரவு அதிகமாக இருப்பதால் அவர்தான் பிரதமர் வேட்பாளராக முன்னிலைப் படுத்தப்படுவார் என்று கேஷ்யங்கள் கூறுகின்றன. அடுத்த பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக தான் முன்னிலைப் படுத்தப்படுவது அப்போது தனது உடல்நிலையைப் பொறுத்தே இருக்கும் என்று எல்.கே.அத்வானி ஏற்கனவே கூறியுள்ளார். இப்போது மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகானும் பிரதமர் வேட்பாளருக்கு போட்டியிடலாம் என்று அனுமானங்கள் நிலவி வருகின்றன. இதுகுறித்து நேற்று டெல்லி வந்த சிவராஜ்சிங் சவுகானிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், பிரதமர் வேட்பாளருக்கு தான் போட்டியிட விரும்பவில்லை என்று கூறினார். மத்திய பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் மட்டுமே தான் பாடுபடப் போவதாக அவர் கூறினார். டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சவுகான், தனக்கு மத்திய பிரதேச மக்களுக்கு சேவை செய்வதே லட்சியம் என்றும், அம்மாநில வளர்ச்சிப் பணிகளுக்கு பணியாற்றுவதே தனது முன்னுரிமை என்றும் அவர் கூறினார். பாரதிய ஜனதா கட்சியின் மத்திய குழுவில் இருந்துகொண்டு தேசிய மட்டத்தில் பணியாற்றுவீர்களா என்று கேட்டதற்கு அப்படி திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார். மத்திய பிரதேசத்தில் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கின்றன. எனவே இதற்கெல்லாம் தனக்கு நேரமில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்