முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாயை அடித்துக் கொலை செய்து ரோட்டில் இழுத்து சென்ற மகள்

புதன்கிழமை, 9 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மேலூர்,மார்ச்.- 9 - மேலூரில் தாயை கட்டையால் அடித்து கொலை செய்து விட்டு உடலை ரோட்டில் இழுத்து சென்றார் மகள். இச்சம்பவம் மேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மேலூர் அருகே உள்ளது ஏ.வெள்ளாளபட்டி, தெற்கு வளைவை சேர்ந்தவர் ஆண்டப்பன் செட்டியார். இவரது மனைவி சாரதாம்பாள்(75). இவர்களுக்கு 5 பெண்கள், 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். கடைசி பெண் அஷ்டலெட்சுமி(35). இவர் கடந்த சில ஆண்டுகளாக மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மற்ற மகன், மகள்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர். 

அஷ்டலெட்சுமியை தாய் சாரதாம்பாள் பராமரித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தாயை அஷ்டலெட்சுமி கட்டையால் தாக்கியுள்ளார். ஏன் அடிக்கிறாய் என சாரதாம்பாள் கேட்டதற்கு நீயும் ஒழிந்து போ, நானும் ஒழிந்து போகிறேன் என்று அஷ்டலெட்சுமி வெறித்தனமாக தொடர்ந்து கட்டையால் தாக்கியுள்ளார். 

மகளின் இந்த திடீர் தாக்குதலால் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார் சாரதாம்பாள். இவர்களது வீடு ஊருக்கு சற்று தள்ளி இருப்பதால் நடந்த சம்பவம் யாருக்கும் தெரியவில்லை. தாய் இறந்தது தெரியாத அஷ்டலெட்சுமி தாயின் தலைமுடியை பிடித்து ரோட்டில் இழுத்து சென்றுள்ளார். இதை கண்ட அப்பகுதியினர் தலைதெறிக்க ஓடினர். சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலறிந்த மேலூர் டி.எஸ்.பி. மணிவண்ணன், சம்பவ இடத்திற்கு போலீசாருடன் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அஷ்டலெட்சுமியை தேடிய போலீசார் ஒன்று நடக்காததை போல உட்கார்ந்திருந்த அவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். அவரிடம் விசாரணை செய்ததற்கு என்னையும் என் தாயாருடன் அனுப்பி வையுங்கள் என்று அழுதபடியே கூறினார். இச்சம்பவம் மேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்