முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரபாண்டி ஆறுமுகத்தின் கல்லூரியை கையகப்படுத்த புகார்

புதன்கிழமை, 16 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, நவ.16 - பொதுமக்களை ஏமாற்றி போலி டிரஸ்டி மூலம் ஐ.டி.பார்க் தொடங்குவதாக கூறி 50 ஏக்கர் நிலத்தை முறைகேடாக வாங்கி கல்லூரி கட்டிக்கொண்ட முன்னாள் தி.மு.க. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் கல்லூரியை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று சேலம் நிலவாரப்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் வக்கீல் மணிகண்டன். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் சேலம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர் முதல் - அமைச்சர் தனி பிரிவில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது நில மோசடி தொடர்பாக புகார் மனு கொடுத்தார். புகார் குறித்து செய்தியாளர்களிடம் வழக்கறிஞர் மணிகண்டன் கூறியதாவது:-

வீரபாண்டி ஆறுமுகம் 2006-ல் அமைச்சராக இருந்த போது சேலம் சாப்ட்வேர் டெக்னோ டெவலப்மெண்ட் டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை தொடங்கினார். இதன் பிறகு ஐ.டி.பார்க் (தொழில் நுட்பபூங்கா) தொடங்க உள்ளதாக கூறி சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில் நிலம் வாங்கப்பட்டது. நிலம் தர சிலர் மறுத்தனர். இன்ஸ்பெக்டர் லட்சுமணனை கொண்டு மிரட்டி அவர்களிடம் நிலம் வாங்கினர். தொழில் நுட்ப பூங்கா வந்தால் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால் அங்கு கல்லூரி கட்டப்பட்டது. எந்த நோக்கத்திற்கு நிலம் வாங்கப்பட்டதோ அதற்கு நிலம் பயன்படுத்தவில்லை.

டிரஸ்ட் பெயரில் வாங்கப்பட்ட 10 ஏக்கர் நிலத்துக்கு பெருமாள் என்பவர் பவர் ஏஜெண்டாக இருந்தார். இந்த நிலம் வீரபாண்டி ராஜா பெயரில் உள்ள டிரஸடுக்கு விற்கப்பட்டுள்ளது. இங்குதான் கல்லூரி கட்டப்பட்டு உள்ளது. இதன் பின்னர் 40 ஏக்கர் நிலமும் வாங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களை ஏமாற்றி போலியாக ஒரு அறக்கட்டளை ஆரம்பித்து கல்லூரி தொடங்கி உள்ளனர். இந்த அறக்கட்டளைதலைவராக வீரபாண்டி ஆறுமுகம் உள்ளார். ஐ.டி.பார்க் அமைப்பதாக கூறி குறைந்த விலைக்கு நிலம் வாங்கி முறைகேடு செய்துள்ளனர்.

எனவே வீரபாண்டி ஆறுமுகத்தின் கல்லூரியை அரசு கையகப்படுத்த வேண்டும். குறைந்த விலைக்கு நிலம் வாங்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக தொகையை அதிகாரிகள் வாங்கி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

டி.ஜி.பி. ராமானுஜத்திடமும் இந்த புகார் மனுவை வழக்கறிஞர் மணிகண்டன் அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்