முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் :சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருமங்கலம், நவ. - 27 - திருமங்கலம் அருகே சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.  திருமங்கலம் அருகே உள்ள குதிரைசாரிகுளம் கிராமத்தை சேர்ந்த ராஜாமணி என்பவருடைய மகன் வீரபாண்டி(37). இவர் இதே கிராமத்தில் ரைஸ் மில் வைத்து அரிசி வியாபாரம் செய்து வருகிறார். ரைஸ் மில்லின் ஒரு பகுதியிலேயே இவரது வீடும் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீரபாண்டி, அவரது மனைவி செல்வி(32), குழந்தைகள் ஷர்சினி(7), நந்தகுமாரன்(4) ஆகியோருடன் அயர்ந்து தூங்கியுள்ளார். அப்போது நள்ளிரவில் வீரபாண்டி குடும்பத்தினர் படுத்திருந்த வீட்டில் இருந்து சுவிட்ச் போர்டில் மின் கசிவு காரணமாக தீப்பொறி ஏற்பட்டுள்ளது. இந்த தீப்பொறி கீழே வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் மீது விழுந்துள்ளது. இதில் பற்றி எரிந்த சிலிண்டர் திடீரென்று பயங்கரமாக வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் வீரபாண்டி குடும்பத்தினர் இருந்த அறை முழுவதும் நெருப்பு கோளமாக மாறி சன்னல் வழியே நெருப்பும், கரும்புகையும் வெளியேறியது.  இதனிடையே அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து உள்ளே சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அது முடியாமல் போகவே, போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் நிலைய அதிகாரி கதிரேசன் தலைமையில் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். பின்னர் தாலுகா இன்ஸ்பெக்டர் சதாசிவம், டவுன் எஸ்.ஐ. கமர்நிஷா மற்றும் போலீசார் உள்ளே சென்று பார்த்த போது வீரபாண்டியும், அவரது குழுந்தைகள் மற்றும் மனைவியும் உடல் கருகிய நிலையில் கிடப்பதை கண்டுபிடித்தனர். மேலும் சிலிண்டர் வெடித்ததில் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாயின. 

பின்னர் சிலிண்டர் வெடித்து தீப்பற்றிய சம்பவத்தில் சிக்கி கரிக்கட்டைகளான 4 பேரின் சடலங்களையும் கைப்பற்றிய போலீசார் அவற்றை பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர சம்பவத்தில் பலியான வீரபாண்டியின் குழந்தை ஷர்சினி திருமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பும், சிறுவன் நந்தகுமாரன் எல்.கே.ஜியும் படித்து வந்துள்ளனர். 

இதனிடையே சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் கருப்பையா, காவல் துறை உயரதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். நான்கு பேர் உடல் கருகி உயிரிழந்தது குறித்து கேள்விப்பட்ட குதிரைசாரிகுளம், பழனியாபுரம் பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்து கதறியழுத சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உடல் கருகி பலியானது திருமங்கலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்