முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாதவரம் அருகே விபத்து கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி

சனிக்கிழமை, 12 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மாதவரம், மார்ச். 12 - மாதவரம் அருகே சாலையில் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது டிராவல்ஸ் கார் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த சோக சம்பவம் குறித்த விபரம் வருமாறு:- 

வண்டலூர் அடுத்த காட்டாங்கொளத்தூரில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு டெல்லியை சேர்ந்த மயான் குப்தா(24), மத்திய பிரதேசத்தை சேர்ந்த மனோஜ் மல்யானி(20), உத்தரபிரதேசத்தை சேர்ந்த அங்கூர் வர்மா(20), கல்கொத்தாவை சேர்ந்த அதர்குப்தா(20) ஆகியோர் பி.டெக் 2-ம் ஆண்டு படித்து வந்தனர். 4 பேரும் நண்பர்கள். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தனர். கல்லூரிக்கு 4 நாட்கள் விடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து 4 பேரும் சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். 

நேற்று முன்தினம் மீனம்பாக்கத்தில் உள்ள டிராவல்ஸ் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்தனர். டிரைவரை அழைக்காமல் அவர்களே காரை ஓட்டிச் சென்றனர். காரின் பின்னால் அவர்களின் நண்பர்கள் மேலும் 4 பேர் 2 மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தனர். அனைவரும் நேற்று முன்தினம் முழுவதும் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்றனர். நேற்று அதிகாலையில் புழல் ஏரி பகுதிக்கு செல்ல முடிவு செய்தனர். மாதவரம் ரவுண்டானா அடுத்த வடபெரும்பாக்கம் கூட்டு சாலையில் கார் வேகமாக வந்தபோது பனி மூட்டம் அதிகமாக ய இருந்தது. அப்போது ரோடு ஓரத்தில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. 

மோதிய வேகத்தில்  காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 

விபத்து நடந்ததை பார்த்ததும் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நண்பர்கள் 4 பேரும் கதறி அழுதனர். அவர்கள் மற்ற நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் மாதவரம் உதவி கமிஷனர் சம்மந்தமூர்த்தி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் விஜயராமுலு மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரே கல்லூரியை சேர்ந்த 4 மாணவர்கள் விபத்தில் பலியானது கல்லூரி நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்