Idhayam Matrimony

2ஜி ஊழல் வழக்கில் சந்தோலியாவுக்கு ஜாமீன்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, டிச.2 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவின் தனிச் செயலாளர் சந்தோலியாவுக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் நேற்று ஜாமீன் வழங்கியுள்ளது. நாட்டையே உலுக்கிய 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் ஆ. ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, சினியுக் நிறுவன அதிபர் கரீம் மொரானி, முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் சந்தோலியா மற்றும் சித்தார்த்த பெகுரா உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கனிமொழி, சரத்குமார் உட்பட 11 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். ராசா, சந்தோலியா, சித்தார்த்த பெகுரா ஆகியோர் மட்டும் சிறையில் இருந்தனர்.  இவர்களில் ராசா ஜாமீன் மனுவே தாக்கல் செய்யவில்லை. 

தொலைத் தொடர்புத் துறை அதிகாரி சித்தார்த்த பெகுரா, கனிமொழியுடன் சேர்ந்து ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 28 ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்த போது பெகுராவுக்கு மட்டும் ஜாமீன் தர டெல்லி ஐகோர்ட் மறுத்து விட்டது. இந்நிலையில் ராசாவின் உதவியாளர் சந்தோலியா, டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஓ.பி. ஷைனி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சந்தோலியாவுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 

சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் லலித் வாதாடுகையில், ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் ஆ. ராசா, சித்தார்த்த பெகுரா மற்றும் சந்தோலியா ஆகியோர்தான் பிரதான எதிரிகள். மிகப் பெரிய முறைகேடு நடப்பதற்கு திட்டமிட்டதில் இவர்கள் 3 பேருக்கும்தான் முக்கிய பங்கு உண்டு. எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கவே கூடாது. எனவே ஜாமீனில் விடுதலையானவர்களுடன் இவர்களை ஒப்பிடவே முடியாது. 

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதற்கு நிறுவனங்கள் விண்ணப்பிப்பதற்கான தேதியை சந்தோலியாதான் மாற்றியுள்ளார் என்றார். 

சந்தோலியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் அகர்வால் கூறுகையில், இந்த வழக்கில் இரு வேறு நிலைப்பாட்டை எடுக்க வேண்டியதில்லை என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. சந்தோலியா அரசு ஊழியர் என்பதால் அவருக்கு ஜாமீன் மறுப்பது சரியானதல்ல. இந்த வழக்கில் ஆதாயம் அடைந்தவர்கள் ஜாமீன் பெற்று வெளியே இருக்கும் போது கடந்த 10 மாதங்களாக சந்தோலியா சிறையில் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன? ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடையே சி.பி.ஐ. பாரபட்சம் காட்டுவது ஏன்? அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய ஸ்வான் டெலிகாம் மற்றும் யுனிடெக் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கே ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சந்தோலியா மட்டும் சிறையில் இருக்கிறார் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நேற்று சந்தோலியாவுக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் ஜாமீன் பெறும் முதல் அதிகாரி சந்தோலியா என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த வழக்கில் இப்போது ராசா மற்றும் பெகுரா மட்டுமே தற்போது சிறையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்