முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி. தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி: அமைச்சர் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜன.22 - நடந்து முடிந்த சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தல்களை போல் வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றியை மக்கள் ஆதரவுடன் பெறும் என்று மதுரை பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 95வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் நகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. மதுரை வடக்கு 1ம் பகுதி கழகம் சார்பில் அண்ணாநகரில் பகுதி கழக செயலாளர் எம்.என்.முருகன் தலைமையிலும், மதுரை மேற்கு 2ம் பகுதி கழகம் சார்பில் பழங்காநத்தத்தில் பகுதி கழக செயலாளர் பெ.சாலைமுத்து தலைமையிலும் எம்ஜிஆர் பிறந்ததின விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, மனித புனிதன் எம்ஜிஆர் தான் நடித்த படங்களில் கூட திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மக்களுக்கு எடுத்துக்கூறி பறைசாற்றி வந்தார். அண்ணாவின் மடியில் விழுந்த கனியாக விளங்கிய எம்ஜிஆர் அண்ணாவின் இதயத்தில் புகுந்தவர். அண்ணாவின் மறைவிற்கு பின்னால் எம்ஜிஆரின் தயவால் ஆட்சிக்கு வந்த கருணாநிதி அண்ணாவின் கொள்கைகளையும்,கோட்பாடுகளையும் மறந்து விட்டு அண்ணாவின் இதயக்கனியாக இருந்த எம்ஜிஆரை பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி தூக்கி எறிந்தார். அன்று முதல் அண்ணாவின் கொள்கைகளை காப்பாற்ற வேணடும் என்ற ஒரே நோக்கத்தோடு அண்ணாவின் பெயரிலேயே மாபெரும் இயக்கத்தை தொடங்கி கழக கொடியில் அண்ணாவின் படத்தை பொறித்து அண்ணாவின் கொள்கைகளை ஒருங்கிணைத்து அண்ணாயிசம் என்று உருவாக்கி தமிழ்நாட்டின் தீய சக்தியான கருணாநிதியை இந்த நாட்டே விட்டே அப்புறப்படுத்துவேன் என்று சபதம் இட்டு, அந்த சபதத்தை நிறைவேற்றும் வகையில் தேர்தல் மூலம் மக்களை சந்தித்து அமோக வெற்றியை பெற்று கருணாநிதியை முதலமைச்சர் அரியணையில் இருந்து இறக்கி அதிமுகஆட்சியை தமிழகத்தில் உருவாக்கி தமிழ்நாட்டின் முதலமைச்சர் அரியணையில் இருந்து நாடு போற்றும் நல்லாட்சியை தந்தவர் எம்ஜிஆர். ஏழை, எளிய மக்களுக்கு வாரி, வாரி வழங்கினார். பள்ளிக்குழந்தைகளின் வயிற்று பசியை போக்க சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய உணவுடன் கல்வியையும் புகட்டியவர் காலத்தால் அழியாமல் இன்று வரை மக்கள் மனதில் இருக்கின்றவர் எம்ஜிஆர். அவர் கொண்டு வந்த உலகம் போற்றும் சத்துணவு திட்டத்தை எதிர்க்கட்சியினர் கூட நிறுத்த முடியவில்லை. அப்படிப்பட்ட உன்னத தலைவன் எம்ஜிஆரின் ஒரே அரசியல் வாரிசாக முதல்வர் அம்மா இன்றைக்கு அதிமுக என்ற இயக்கத்தை கட்டிக்காத்து வருகிறார். எம்ஜிஆர் மறைவிற்கு பின்னால் பிளவு பட்ட கழகத்தை ஒன்றாக இணைத்து மீண்டும் மனித புனிதன் எம்ஜிஆரின் ஆட்சியை தமிழகத்தில் மலர செய்தார். கருணாநிதி ஆட்சியில் இருந்த போது மக்களை பற்றி சிந்திக்க வில்லை. தன்னுடைய மக்களையும்,பேரன், பேத்திகளை பற்றி உயர்த்துவதற்காக திட்டங்களை போட்டு தமிழகத்தை சுரண்டி சென்றுவிட்டார். ஆனால் தமிழக மக்களின் எதிர்கால நலனைகருத்தில் கொண்டு முதல்வர் அம்மா பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியும் வருகிறார்.

   தற்போது ஒரு கோடியே 85 லட்சத்து 59 ஆயிரத்து 754 குடும்பங்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசி, பெண்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், லேப்டாப் மற்றும் நான்கு சீருடைகள் புத்தக பைகள், ஜாம்ரின்ரி பாக்ஸ் இப்படி எண்ணற்ற திட்டங்களை முதல்வர் அம்மா அமுல்படுத்தி வருகிறார். சமீபத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்து போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகளை செய்து ரூ.850 கோடியை தாயுள்ளத்தோடு முதல்வர் அம்மா பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி உள்ளார். கரும்பு விவசாயிகளுக்கு விலையை உயர்த்திக்கொடுத்துள்ளார். முல்லைப்பெரியாறு அணை பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறார். ஆனால் தன் சுய லாபத்திற்காக தமிழகத்தின் எல்லா வளங்களையும் கருணாநிதி காவு கொடுத்தார். அதன் விளைவு இன்றைக்கு முல்லைப்பெரியாறு, பாலாறு, காவேரி பிரச்சினைகள் தலைதூக்கி உள்ளது. மத்திய மந்திரியாக இருக்கும் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி இது போன்ற மக்கள் பிரச்சினையை பற்றி பாராளுமன்றத்தில் பேசாமல் மவுனமாகவே இருந்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார். கடந்த ஆட்சியில் திமுகவினரால் அபகரிப்பு செய்யப்பட்ட 2400 ஏக்கர் நிலத்தில் இதுவரை 800 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் அம்மா எடுத்த அதிரடி நடவடிக்கையே இதற்கு காரணம். அம்மாவின் ஆளும் திறனை கண்டு உலக அரசியல் வல்லுனர்கள் பாராட்டி வருகிறார்கள். அவரது ஆட்சி திறமை தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே தேவை என்று வடநாட்டு பத்திரிகைகள் அனைத்தும் பாராட்டி எழுதி வருகின்றது. எனவே சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தல்களை போல வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக அம்மாவின் தலைமையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றே தீரும். அப்படிப்பட்ட வெற்றிக்கனியை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பறித்து முதல்வர் அம்மா விரும்பும் மத்திய அரசை உருவாக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்