முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. சுகாதார திட்ட ஊழல் முக்கிய குற்றவாளி தற்கொலை

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2012      ஊழல்
Image Unavailable

 

லக்னோ, ஜன.24 - உ.பி. யில் தேசிய சுகாதார திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில்  கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அதிகாரி ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். உத்தர பிரதேசத்தில் தேசிய சுகாதார திட்டத்தில் பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பலநூறு கோடி ரூபாய்க்கு இந்த ஊழல் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஊழல் வெளியானதை தொடர்ந்து இரண்டு மருத்துவ அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த ஊழல் விவகாரத்தை முழுமையாக விசாரித்து அறிக்கை தர வேண்டும் என்று மத்திய புலனாய்வு நிறுவனமான சி.பி. ஐ.க்கு அலகாபாத் ஐகோர்ட்டு  உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து இந்த ஊழல் விசாரணையை சி.பி. ஐ. மேற்கொண்டது. இந்த ஊழலில் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி. ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

அந்த ஆவணங்களின் அடிப்படையில் உ.பி. முதல்வர் மாயாவதி அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த முன்னாள் அமைச்சர்கள் பாபு சிங் குஷ்வஹா மற்றும் ஆனந்த் மிஸ்ரா ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தினார்கள்.

இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக உ.பி. கட்டுமான மற்றும் வடிவமைப்பு டிவிஷனின்  திட்ட மேலாளராக இருந்த சுனில் வர்மாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை கடந்த 4 ம் தேதி லக்னோவில் நடைபெற்றது. 

அப்போது சி.பி. ஐ. அதிகாரிகள் வர்மாவிடம் துருவித் துருவி கேள்விகளை கேட்டனர். இந்த விசாரணைக்கு பிறகு சில நாட்கள் கழித்து நேற்று காலை வர்மா லக்னோவில் உள்ள தனது வீட்டில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி குண்டு காயங்களுடன் வர்மா ஆஸ்பத்திரிக்கு எடுத்து  செல்லப்பட்டார். ஆனால் அவர் வரும் வழியிலேயே மரணம் அடைந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். வர்மா துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதை வர்மாவின் மகன் உறுதி செய்தார்.

தேசிய ஊரக சுகாதார திட்ட ஊழல் வழக்கில் வர்மா உள்ளிட்ட 4 முன்னாள் அரசு அதிகாரிகள் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் வர்மா தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தர பிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க இருக்கும் நேரத்தில் வர்மா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் லக்னோவில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்