முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிதம்பரம் முன்னிலையில் 700 தீவிரவாதிகள் சரணடைந்தனர்

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

கெளஹாத்தி, ஜன.25 - அசாம் மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில் 700  தீவிரவாதிகள் தங்களது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைந்தனர். அசாம் மாநிலத்தில் உல்பா உள்ளிட்ட 9 தீவிரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. தடை செய்யப்பட்ட இந்த இயக்கங்களின் தீவிரவாதிகள் அசாமில் பல்வேறு வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி வந்தனர். நாச வேலைகளிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தை நடத்த வருமாறு உல்பா உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத இயக்கங்களுக்கு மத்திய அரசும் மாநில அரசும் அழைப்பு விடுத்திருந்தன. இந்த பேச்சுவார்த்தைகள் பலமுறை தோல்வி அடைந்து கடைசியில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 9 இயக்கங்களைச் சேர்ந்த 700 தீவிரவாதிகள் தாங்கள் தீவிரவாத செயல்களை விட்டுவிட்டு நாட்டு மக்களுடன் இணைந்து வாழ்க்கை நடத்த விரும்புவதாக தெரிவித்தனர். இதையடுத்து இவர்கள் சரணடைவதற்கு தேவையான ஏற்பாடுகள் கெளஹாத்தியில் செய்யப்பட்டன. அதன்படி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில் இவர்கள் 700 பேரும் தங்களது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு நேற்று சரணடைந்தனர். அசாம் மாநிலத்தில் இதுவரை இவ்வளவு தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் சரணடைந்தது கிடையாது. எனவே அதிக தீவிரவாதிகள் சரணடைந்தது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது. இவர்கள் முன்னிலையில் பேசிய ப.சிதம்பரம், இவர்களுக்கு சில அறிவுரைகளை கூறினார். கடந்த காலத்தை மறந்துவிடுங்கள். வருங்காலத்தை சாதகமாக எதிர்நோக்குங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சரிசமமான அளவில் நடத்தப்படுவீர்கள். கண்ணியமான கவுரவமான வாழ்க்கையை உங்களால் நடத்த முடியும் என்று சிதம்பரம் கூறினார்.

ஏற்கனவே இந்த 9 தீவிரவாத இயக்கங்களும் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இந்த தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்ந்து பேச்சு நடைபெறும் என மத்திய மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசாமைத் தனி நாடாக பிரிக்க வேண்டும் அல்லது அசாமிற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துத்தான் இந்த தீவிரவாத அமைப்புகள் அசாமில் கடந்த பல ஆண்டுகளாக வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்