முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக தேர்தல் - வேட்பு மனு தாக்கல் நாளை துவக்கம்

வெள்ளிக்கிழமை, 18 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, மார்ச்.18 - சட்டசபை தேர்லுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (19-ம் தேதி) துவங்குகிறது.  மனுதாக்கல் செய்ய கடைசி நாள் 26-ந் தேதி ஆகும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வேட்பாளர்கள் ஊர்வலமாக சென்று மனுதாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளனர். தமிழக சட்டசபையின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதையடுத்து ஏப்ரல் 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை கடந்த 2-ம் தேதி தேர்தல் கமிஷன் வெளியிட்டது. தமிழகம் மட்டுமில்லாமல் கேரளா, புதுச்சேரி மாநிலங்களும் இதே தேதியில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆரம்பத்தில் இருந்த விதிமுறைகளை தேர்தல் கமிஷன் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டு, பல கோடி ரூபாய் மற்றும் நகைகள், சேலைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சுவர் விளம்பரம் எழுதவும், கட்சிக்கொடிகள், பேனர்கள் கட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பண நடமாட்டத்தை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிமாநில ஐ.பி.எஸ். அதிகாரிகள் 5 பேர் தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் விதிமீறல் வன்முறை சம்பவங்களை கண்காணித்து அவற்றை தடுப்பதற்காகன நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (19-ம்) தேதி துவங்குகிறது. மாநிலத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களுக்கு வழங்குவதற்குரிய படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மனு தாக்கல் செய்யவருவோருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எக்காரணம் கொண்டும் ஊர்வலமாக வரக்கூடாது. மனுதாக்கல் அறையில் வேட்பாளருடன் ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சுயேச்சை வேட்பாளருக்கு மட்டும் முன்மொழியே 10 பேர் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனு தாக்கல் நடக்கும். சம்பந்தப்பட்ட தொகுதிக்கான தேர்தல் அதிகாரியிடம் நேரடியாக மனு தாக்கல் செய்யவேண்டும். மனு தாக்கலின்போது சொத்து விவரம், கல்வித்தகுதி, நிலுவை வழக்குகள் குறித்த ஆவணங்களையும் வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.

234 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. மனு தாக்கலுக்கு 26-ம் தேதி கடைசி நாள். மனுக்கள் மீதான பரிசீலினை 28-ம் தேதி நடக்கிறது. அன்றே சின்னங்கள் ஒதுக்கப்படும். மனு வாபஸ் பெஹ 30-ம் தேதி இறுதிநாள். அன்று மாலை இறு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 13-ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஒரு மாதம் கழித்து மே.13-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

சட்டமன்ற தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட வெளி மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனைவரும் இன்று தமிழகம் வருகின்றனர். மனு தாக்கல் துவங்கும் நாளில் இருந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்கின்றனர்.

தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகளும் தயார் நிலையில் உள்ளன. அ.தி.மு.க. தலைமையிலான தே.மு.தி.க. , மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., புதிய தமிழகம், மனிதய நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க. விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு முடிந்து, தொகுதிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளர் பட்டியலை முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டார்.

தனித்து  போட்டியிடும் பா.ஜ. வேட்பாளர்கள் பட்டியலை ஏற்கனவே அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்