முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு தாம்பத்ய உறவில் பாதிப்பு ஏற்படும்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜன. - 31 - நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு தாம்பத்ய உறவில் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நீரிழிவு இல்லாதவர்களை விட, நீரிழிவு தாக்கியவர்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும் வாய்ப்பு இரு மடங்கு அதிகம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் பல லட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய் தாக்குதலினால் முதலில் பாதிக்கப்படுவது நரம்பு மண்டலம் என்பதால் நீரிழிவு உடையவர்களுக்கு நரம்பு தளர்ச்சி ஏற்படும். ஆண்களுக்கு ஆண்மை குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.  மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்ளாவிட்டால் முழு அளவில் ஆண்மை குறைவு ஏற்பட்டு விடும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.  நீரிழிவு உடையவர்கள் அனைவருக்குமே நரம்பு தளர்ச்சி தலைதூக்க ஆரம்பிக்கும். நரம்பு மண்டலம் முக்கிய பங்கு வகிப்பது பாலுணர்வில்தான். மனதும், உடலும் சேர்ந்து ஒத்துழைக்கும் போது ஆசையில் ஆரம்பிக்கும் உணர்வுகள், உடலுறவில் முடிந்து திருப்தி அடையும். நீரிழிவு மனதையும் உடலையும் பாதிக்கும் நோய் என்பதால் தாம்பத்ய பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பாலுறவின் போது நரம்புகளின் செயல்பாடு மிகவும் முக்கியமானது. நுகர்தல் மற்றும் உணர்தல் ஆகிய இரண்டும்தான் பாலுறவின் செயல்பாட்டுக்கு தூண்டுதலாக அமைகின்றன. இதனை சிறப்பாக செய்பவை சிறிய நுண்ணிய நரம்புகள்தான். நீரிழிவு நோய் ஏற்படும் போது இந்த ரத்த நாளங்கள் செயல்பாட்டை இழக்கின்றன. இதனால் சரியாக ரத்த நாளங்கள் ஆண் உறுப்பினுள் இரத்தத்தை தேக்கிட சிரமப்படுகின்றன. மொத்த உடலின் இரத்த ஓட்டமும் சீராக இயங்காத காரணத்தால் தண்டுவடம் பாதிப்படைகிறது. இதனால் மன இறுக்கம் தோன்றி பாலுறவில் பாதிப்பு ஏற்படுகிறது. நீரிழிவு நோயால் பெண் உறுப்புகளில் உள்ள நரம்புகள், நாளங்கள் பாதிக்கப்படும். பூரண உணர்ச்சி இல்லாததால் பெண்ணுறுப்பு வறட்சி, ரத்தம், சுரப்பு நீர் இல்லாத நிலை, வலியுள்ள உடலுறவு ஏற்படுகின்றன. இதனால் பெண்களுக்கு உடலுறவு பிடிக்காமல் போய் விடுகிறது. இத்தகைய குறைபாடு ஏற்படாமல் தவிர்க்கவும், குறைபாடு இருப்பின் அவை அதிகரிக்காமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை அவசியம். அதற்கு தக்க நடவடிக்கை மேற்கொண்டு வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருந்தாலும் மற்ற சில நோய் தாக்குதலினாலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நோய் கிருமிகள், அதிக கொழுப்பு சத்து, உயர் ரத்த அழுத்தம், பிற மருந்து மாத்திரைகளால் ஏற்படும் அழற்சி, தைராய்டு, டென்ஷன், மன அழுத்தம், சுரப்பி கோளாறுகள், வயது, எடை, உடல் பருமன், உடல் உழைப்பின்மை, இவை அனைத்துடன் சர்க்கரை நோய் அல்லது சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் ஆண்மை குறைவு ஏற்படுகிறது. கட்டுப்பாடான வாழ்க்கை, ஊட்டச் சத்துள்ள அதே சமயம் சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவு முறை, உடற்பயிற்சி, தக்க இடைவெளியில் பரிசோதித்து கொள்வது, தகுந்த மருத்துவ ஆலோசனை அவசியம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.    
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்