முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல பின்னணி பாடகி ஜானகிக்கு தலையில் பலத்த காயம்

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2012      சினிமா
Image Unavailable

 

திருப்பதி, பிப்.8  - திருப்பதி விடுதி குளியலறையில் வழுக்கி விழுந்த பிரபல பின்னணி பாடகி ஜானகிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பதி ஏழுமலையான் பெருமைகளை அன்மையா என்பவர் கீர்த்தனைகளாக பாடியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்த கீர்த்தனைகள் திருப்பதியில் விழாவாக நடத்தப்படுவது வழக்கம். கடந்த 5 ஆண்டுகளாக இந்த விழா நடந்து வருகிறது. பிரபல பாடகர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் பின்னணி பாடகி ஜானகியும் இதில் கலந்து கொள்ள சென்றிருந்தார். 

நேற்றிரவு கச்சேரியில் கலந்து கொண்டு கீர்த்தனைகளை பாடிய பிறகு தனியார் விடுதிக்கு வந்து ஓய்வெடுத்தார். விடுதியில் உள்ள குளியலறைக்கு ஜானகி சென்றார். குளியலறையில் தண்ணீர் தேங்கியிருந்ததை கவனிக்காததால் கால் வழுக்கி அதில் தவறி விழுந்தார். இதில் ஜானகி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தலையில் இருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் அவர் மயக்கமடைந்தார். இதனை கண்ட அவரது உதவியாளர் கொடுத்த தகவலின் பேரில் ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டது. 

கீழ்த்திருப்பதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை முன்பு அவரது ரசிகர்கள் திரண்டனர். ஜானகியின் உடல்நிலை குறித்து தகவல் தெரிவிக்குமாறு கோஷமிட்டனர். இதையடுத்து மருத்துவமனை டைரக்டர் ரெங்கம்மாள் கூறிய போது, ஜானகி உடல்நலம் குறித்து ரசிகர்கள் பயப்பட தேவையில்லை. தலையில் அடிபட்டதால் ரத்த உறைவு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பதை பார்த்து வருகிறோம். அதன் பிறகே சிகிச்சை விபரங்களை கூற முடியும் என்றார். 

பாடகி ஜானகிக்கு ஏற்கனவே ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும் உண்டு. நேற்றிரவு தூக்கம் குறைந்த நிலையில் இருந்ததாலும், காலையில் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாததாலும் அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அவருடன் குடும்ப உறுப்பினர்கள் யாரும் செல்லவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் தெரிந்ததும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் திருப்பதிக்கு விரைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்