முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலிவு விலையில் அம்மா உப்பு: முதல்வர் துவக்கி வைக்கிறார்

செவ்வாய்க்கிழமை, 10 ஜூன் 2014      அரசியல்

சென்னை, ஜூன், 11 - மலிவு விலையில் ‘அம்மா உப்பு' விற்பனையை முதல்வர் ஜெயலலிதா இன்று (புதன்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கிறார் தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது. மாதந்தோறும் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

நகரப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் பயன்பெறுவதற்காக அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் சுமார் 500 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.     அதுபோல பஸ் நிலையங்களில் அம்மா குடிநீரும் பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. 1 லிட்டர் குடிநீர் ரூ.10க்கு கிடைப்பதால் தொலை தூரங்களுக்கு பயணம் செய்பவர்களுக்கு அது பயன் உள்ளதாக இருக்கிறது.

இந்த நிலையில் தமிழக அரசு மலிவு விலையில் உப்பு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இத்திட்டத்திற்கு அம்மா உப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது.இதில் இரும்பு மற்றும் அயோடின் சத்து கலந்த உப்பு, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு, குறைந்த அளவு சோடியம் உப்பு என 3 வகையான உப்புகள் விற்பனை செய்யப்படுகிறது.முதல் வகை உப்பு ரூ.14க்கும் (வெளி மார்க்கெட்டில் ரூ.22க்கு விற்கப்படுகிறது), 2-வது வகை உப்பு ரூ.10-க்கும் (வெளி மார்க்கெட்டில் ரூ.16), 3-வது வகை உப்பு ரூ. 21-க்கும் (வெளி மார்க்கெட் விலை ரூ.25) விற்பனை செய்யப்படுகிறது.

மலிவு விலை அம்மா உப்பு வகை விற்பனையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று (புதன்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கிறார்.

இந்த 3 வகை உப்புகளை தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு உப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கிராமத்தில் உப்பு தொழிற்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு முதல் கட்டமாக 100 டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது.அமுதம் சிறப்பங்காடி, சிந்தாமணி கூட்டுறவு அங்காடி மற்றும் கூட்டுறவு துறை ரேஷன் கடைகளில் இந்த மலிவு விலை உப்பு வகைகள் விற்பனைக்கு கிடைக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்