முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

ஞாயிற்றுக்கிழமை, 10 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஆக.11 - ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை உள்பட முக்கிய நகரங்களில் தீவிரவாதிகளின் நாசவேலை இருக்கக்கூடும் என மத்திய உளவுத்துறை தெரிவித்தது. இதையடுத்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

விமான நிலைய போலீசார், மத்திய தொழிற்படையினர், பாதுகாப்பு படையினர் கொண்ட கூட்டு பாதுகாப்பு பணி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. விமான நிலையத்தின் உள் பகுதிகளில் மத்திய தொழிற்படையினர் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் நுழைவு பகுதியில் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். விமான நிலைய நுழைவு வாயில் பகுதியில் போலீசார், வாகனங்களை சோதனை செய்த பிறகே உள்ளே விடுகின்றனர்.

விமான நிலைய வாசல் முன்பு துப்பாக்கி ஏந்தியபடி கமாண்டோ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். சுதந்திர தினத்தையொட்டி விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கும் கடந்த 5-ந் தேதி முதல் வருகிற 20-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் விமான நிலைய உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் மகிமைவீரன் தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

பயணிகளை ஏற்றிச் செல்லவும், இறக்கவும் வரும் வாகனங்கள் 2 நிமிடங்கள் மட்டும் நிறுத்த அனுமதிக்கப்படும். கார்கள் நிறுத்துமிடம் மற்றும் விமான நிலைய சுற்று பகுதிகள் அனைத்தும் ரகசிய கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.

விமான நிலையத்தை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலைய போலீசார் விமான நிலைய பகுதிகளில் மாறுவேடங்களில் கண்காணித்து வருகின்றனர். விமான நிலைய பகுதிகள் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்து உள்ளதால் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் விமானத்தில் செல்லும் பயணிகளும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த பகுதியில் நவீன கேமரா பொருத்தப்பட்ட வேன்கள் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. விமான நிலையத்திற்குள் சந்தேகப்படும்படியாக சுற்றித் திரியும் நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு உள்ள வாகனங்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். விமான நிலையத்தில் அனைத்து பகுதிகளிலும் மோப்ப நாயுடன் கண்காணிக்கும் பணியில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

விமான நிலையத்தில் போலீசார், மத்திய தொழிற்படை போலீசார், விமான நிலைய பாதுகாப்பு படையினர் என அனைத்து தரப்பினர் சேர்ந்து 24 மணி நேரமும் பாதுகாப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

விமான நிலைய வளாகத்திற்குள் சந்தேகப்படும்படியான எந்த ஒரு பொருளை கண்டாலும் அவற்றை யாரும் எடுக்காமல் அருகில் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்