முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1993-2013 வரை சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் ரத்து

திங்கட்கிழமை, 25 ஆகஸ்ட் 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.26- 1993- 2004, 2006- 2013 காலகட்டத்தில் செய்யப்பட்ட நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் சட்டவிரோதமானவை என்றும், எனவே அந்த ஒதுக்கீடுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2004-ம் ஆண்டுகளில் நிலக்கரித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகவும் இதனால் மத்திய அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து சி.பி.ஐ.விசாரணை சுப்ரீம்கோர்ட்டு கண்காணிப்பில் நடைபெற்றது விசாரணை முடிவில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு விபரம் வருமாறு:-

நிலக்கரி ஒதுக்கீடுகள் செய்த கண்காணிப்பு கமிட்டியின் செயல்பாடுகள் நியாயமாகவும், வெளிப்படையாகவும் இல்லை. வரையறுக்கப்பட்ட நெறிகள் ஏதும் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் பின்பற்றப்படவில்லை. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் சட்டவிரோதமானவை. எனவே, 1993- 2004, 2006- 2013 காலகட்டத்தில் செய்யப்பட்ட நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது.

ரத்து செய்யப்பட்ட நிலக்கரி படுகைகளை வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வது குறித்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைக்கலாம் எனவும் அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

ஏ.எம்.ஆர். அயர்ன் அண்ட் ஸ்டீல், ஜெ.எல்.டி. யவத்மால் எனர்ஜி, வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக், ஜே.ஏ.எஸ். இன்ப்ரா கேபிடல் பிரைவேட் லிமிடெட், விகாஷ் மெட்டல்ஸ், கிரேஸ் இண்டஸ்ட்ரீஸ், ககன் ஸ்பாஞ், புஷ்ப் ஸ்டீல், ஹிண்டால்கோ, பி.எல்.ஏ. இண்டஸ்ட்ரீஸ், கேட்ரான் டெக்னாலஜீஸ், கேஸ்ட்ரான் மைனிங் ஆகிய நிறுவனங்கள் முறைகேடாக நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு பெற்றதாக சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்