முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷெரிப்புக்கு எதிராக போராட்டம்: பாக்., தளபதி ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 31 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், செப்.01 - பாகிஸ்தானில் ஷெரிப்புக்கு எதிராக உச்சக்கட்ட போராட்டம் உச்ச நிலையை எட்டியுள்ள சூழலில், பிரதமர் நவாஸ் ஷெரீப் இல்லத்தை முற்றுகையிட சென்ற அரசு எதிர்ப்பாளர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதில் 3 பேர் பலியாகினர்; சுமார் 450 பேர் காயமடைந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அவசர கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

பாகிஸ்தானில் நவாஸ் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சித் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான் கான், சூபி மதத் தலைவரும், பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சித் தலைவருமான தாஹிர் உல் காத்ரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நவாஸ் ஷெரீப் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளதால் அவர் பதவி விலக வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இரு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கடந்த 15 நாள்களாக முற்றுகையிட்டுள்ளனர்.

போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் நவாஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசுத் தரப்புக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற பல சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்தன. தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசு தரப்பு ஒப்புக் கொண்டது. ஆனால் நவாஸ் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் சமரசத்தை ஏற்படுத்த ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் தலையிட்டுள்ளதால் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், போராட்ட இடத்தை பிரதமர் இல்லத்துக்கு எதிரில் மாற்றுமாறு இம்ரான் கானும் காத்ரியும் தங்கள் ஆதரவாளர்களுக்கு சனிக்கிழமை இரவு உத்தரவிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, பிரதமர் இல்லத்தை முற்றுகையிடச் சென்ற போராட்டக்காரர்களை, போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், ரப்பர் தோட்டாக்களால் சுட்டும் கலைக்க முயன்றனர்.

அதையும் மீறி நூற்றுக்கணக்கானோர் அருகில் உள்ள நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்தனர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டினர்.

இந்த மோதலில் சுமார் 450 பேர் காயம்டைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் 3 பேர் இறந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசுக்கு எதிரான போராட்டம் 18-வது நாளாக நேற்று தொடர்ந்த நிலையில், தனது ஆதரவாளர்கள் மத்தியில் இம்ரான் கான் பேசினார்.

அப்போது, "நாட்டு மக்களும் அரசு ஊழியர்களும், போலீஸாரும் இந்த சட்டவிரோத அரசுக்கு எதிராக போராட வேண்டும். அரசு உத்தரவுகளை அதிகாரிகள் புறக்கணிக்க வேண்டும்.

நாட்டு மக்களின் சுதந்திரத்துக்கான இந்தப் போராட்டத்தில் நான் உயிரை விடவும் தயாராக உள்னேன். எனது இறுதி மூச்சு உள்ளவரை போராட்டம் தொடரும்" என்றார் இம்ரான் கான்.

இந்தச் சூழலில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ரஹீல் ஷெரீப் அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளார். அதில், முக்கிய கமாண்டர்கள் பங்கேற்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்