முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈழத்தமிழர்களை உளவாளியாக மாற்றும் பாக்., அதிகாரிகள்

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 14 – தமிழகத்தில் மிகப்பெரிய நாசவேலையில் ஈடுபடும் சதி திட்டத்துடன் இலங்கை தமிழரான அருண் செல்வராசன் ஊடுருவி உளவு பார்த்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தான் உளவாளியாக மாறி மிகவும் துணிச்சலுடன் சென்னை வடபழனியில் அடுக்கு மாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து தங்கி, ‘‘ஐஸ் ஈவண்ட் மேனேஜ்மெண்ட்’’ என்ற கம்பெனியையும் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தின் பல பகுதிகளில் அருண் செல்வராசன் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். யாரும் எளிதில் நுழைந்து விடமுடியாத துறைமுகம் உள்ளிட்ட பாதுகாப்பான பகுதிகளிலும் அருண் செல்வராசன் ஊடுருவி பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளார்.

முக்கியமான இடங்கள் பலவற்றையும் அவர் போட்டோக்கள் எடுத்து அனுப்பி வைத்துள்ளார். இந்த போட்டோக்கள் மற்றும் உளவு தகவல்கள் அனைத்தையுமே இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சித்திக், சிராஜ் அலி இருவருக்கும் அருண் செல்வராசன் அனுப்பி உள்ளார். இவர்கள் தான், அருண் செல்வராசனை உளவாளியாக மாற்றி தமிழகத்திக்கு அனுப்பி வைத்து இயக்கியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் அருண் செல்வராசனை போலவே தமிழகத்தில் தங்கி இருந்து உளவுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் உளவாளியான ஜாகீர் உசேன் பிடிபட்டார்.

தமிழகத்தில் உள்ள இஸ்ரேல் தூதரகம், அமெரிக்கா தூதரகம், ஜெமினி மேம்பாலம் ஆகியவற்றின் போட்டோக்களும் அவரிமிருந்து கைப்பற்றப்பட்டிருந்தன. இந்த தகவல்களும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டிருந்தது.

ஜாகீர் உசேனை கைது செய்த கியூபிரிவு போலீசார், இலங்கை தூதரக அதிகாரிகளான பாஸ், சித்திக் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து ஜாகீர் உசேன், கடந்த 2012–ம் ஆண்டு கைதான திருச்சி தமிம் அன்சாரி ஆகியோரின் பின்னணி பற்றி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்தனர். இதன் தொடர்ச்சியாகவே தற்போது அருண் செல்வராசன் சிக்கியுள்ளார்.

இலங்கையை சேர்ந்த ஜாகீர் உசேன், அருண் செல்வராசன் ஆகிய 2 பேரை போல மேலும் பல ஈழத்தமிழர்களை மூளைச்சலவை செய்து பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் தமிழகத்துக்கு உளவாளிகளாக அனுப்பி வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அவர்கள் யார் – யார்? என்கிற தகவல்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திரட்டியுள்ளனர்.

இதைவைத்து பார்க்கும் போது, தமிழகத்தில், இலங்கை தமிழர்களை வைத்தே, நாசவேலையில் ஈடுபட பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. செயல்பட்டு வருவது அம்பலமாகியுள்ளது.

ஏற்கனவே ஜாகீர் உசேன் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள பாக்.தூதரக அதிகாரிகளான பாஸ், சித்திக் இருவரையும் அருண் செல்வராசன் வழக்கிலும் சேர்க்க தேசிய புலனாய்வு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் இது போன்ற சதி செயல்களை முடிவுக்கு கொண்டு வந்து தீவிரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிரம் காட்டியுள்ளனர். எனவே சதி திட்டத்துடன் செயல்பட்டு வரும் அந்த அதிகாரிகளை கைது செய்ய அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பான தகவல்களை தேசிய புலனாய்வு அதிகாரிகள் மத்திய அரசுக்கு முறைப்படி தெரிவித்துள்ளனர். இந்திய தூதரகம் மற்றும் இலங்கை அரசின் துணையுடன் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் சதி திட்டம் பற்றி முழுமையாக விசாரிக்க தேசிய புலனாய்வு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக விரைவில் அவர்கள் இலங்கை சென்று விசாரணை நடத்துகிறார்கள்.

இந்த நிலையில் உளவாளி அருண் செல்வராசன், பரங்கிமலையில் உள்ள ஆபீசர்ஸ் டிரைனிங் அகாடமிக்குள் கடந்த 2009ம் ஆண்டே புகுந்திருப்பது தெரியவந்துள்ளது. அங்கு பார் டெண்டர் எடுத்திருந்த அவர் அதிகாரிகளுடன் போட்டோக்களும் எடுத்துள்ளார்.

இதனை இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு அருண்செல்வராசன் அனுப்பி வைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்