முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்திய படை குவிப்பு

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

ஸ்ரீநகர், செப் 23:

எல்லை பகுதியில் பதட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சீனாவுக்கு பதிலடி கொடுக்க 15 படை பிரிவுகளை இந்திய தரப்பு லடாக்கில் குவித்துள்ளது.

1960 களின் தொடக்கத்தில் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவும், சீன பிரதமர் சூயென்லாயும் நெருக்கமாக இருந்த போதிலும் அருணாசல பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்தது. இந்த நிகழ்வு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது. கால ஓட்டத்தில் விரிசல் தணிந்து விட்டது. என்ற போதிலும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு திருப்திகரமாக இருக்கிறது என்று கூற முடியாது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அவ்வப்போது சிறிய அளவில் மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன. என்ற போதிலும் 1960களுக்கு பிறகு முழு அளவிலான போர் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் சீன படையினர் முகாமிட்டார்கள். தவ்லத் பெக் ஓல்டி என்ற இடத்தில் இருந்து அவர்கள் வெளியேற மறுத்தனர். எல்லை பகுதியில் இந்தியா சார்பில் அமைக்கப்பட்டிருந்த காப்பரண்களை அகற்ற வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினர். இதற்கு முதலில் இந்தியா சம்மதிக்கவில்லை. பிறகு வேறு வழியின்றி காப்பரண்களை இந்தியா அகற்றியது. இதன் பிறகே சீன ராணுவ வீரர்கள் தங்கள் தாயகத்திற்கு திரும்பினார்கள்.

சீன அதிபர் ஜி  ஜின்பிங், இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனால் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவு வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு முற்றிலும் மாறான நிகழ்வுகளே நடைபெற்று வருகின்றன. காஷ்மீருக்குள் சீன படையினர் ஊடுருவினார்கள். லடாக்கில் உள்ள சுமர் பகுதியில் நூற்றுக்கணக்கான சீன ராணுவ வீரர்கள் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளார்கள். அவர்களை அங்கிருந்து வெளியேறுமாரு இந்திய ராணுவ வீரர்கள் கூறினார்கள். ஆனால் சீன ராணுவ வீரர்கள் அதை ஏற்கவில்லை. மாறாக இந்திய ராணுவ வீரர்களை சீன ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்தார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் அங்கு திரண்டு சென்றனர். இதன் பிறகு நிலைமை ஓரளவு சீரடைந்தது. லடாக் பகுதியில் சீன படை வீரர்கள் அத்துமீறியுள்ளதை சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் கவனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கொண்டு சென்றார். அத்துமீறல்  நடைபெற்றிருந்தால் சீன படை வீரர்களை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜி ஜின்பிங் உறுதியளித்தார். ஆனால் அதே நேரத்தில் இரு தரப்பாலும் ஏற்கப்பட்ட எல்லை நிர்ணயம் செய்யப்படாதது தான் பிரச்சினைக்கு மூல காரணம்.

எனவே துல்லியமாக எல்லையை நிர்ணயம் செய்ய வேண்டும். அதுவரை இப்பிரச்சினை ஓயாது என்பதையும் ஜி ஜின்பிங் குறிப்பிட தவறவில்லை. இந்தியாவுக்குள்ளும் சீனர்கள் சாலை அமைத்து வருகிறார்கள். அதற்கான கட்டுமான பொருட்களையும் இதர தளவாடங்களையும் சீனாவில் இருந்து கொண்டு வருகிறார்கள். லடாக்கில் உள்ள டிபிள் என்ற இடம் சீன எல்லையில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான இந்த இடம் வரை சாலை அமைத்தே தீர வேண்டும் என்பதில் சீனர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த இந்திய தரப்பு மேற்கொண்ட முயற்சி இதுவரை வெற்றி பெறவில்லை.

இந்தியாவுக்குட்பட்ட பகுதியில் சீனர்கள் 7 கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். 4 டிரக்குகள், 3 ஜீப்புகள் ஆகியவற்றை அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். எல்லைக்கு அப்பால் தங்கியுள்ள 500 சீன ராணுவத்தினர் அவர்களுக்கு தேவையானவற்றை அவ்வப்போது அளித்து வருகிறார்கள். சீன ராணுவ வீரர்கள் கூடாரம் அமைத்து தங்கியிருக்கும் இடம் நடுங்க வைக்கும் குளிர் மிகுந்த பகுதியாகும். அங்கு மைனஸ் 3 டிகிரி சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. இம்மாதம் 10ம் தேதி எத்தகைய நிலை காணப்பட்டதோ அதை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. ஆனால் சீனா இதை பொருட்படுத்த மறுக்கிறது. எல்லை கட்டுப்பாடு கோட்டின் அருகில் 1,05,000 இந்திய ராணுவ வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கிழக்கு லடாக் பகுதியில் மட்டும் 15,000 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 15 படை பிரிவுகளை லடாக் பகுதிக்கு அனுப்ப இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேவைப்பட்டால் அசாம் ரைபில்சை சேர்ந்த 40 ஆயிரம் வீரர்களை எல்லை பகுதிக்கு அனுப்பவும் மத்திய அரசு உத்தேசித்துள்ளது. தவுலத்பெக் ஓல்டியில் இருந்து சமர் வரையிலான பகுதியில் பதட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சீன ராணுவத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் வழிதவறி இந்திய பகுதிக்குள் நெடுந்தூரம் வந்து விட்டார். அவரை இந்திய ராணுவத்தினர் பிடித்து வைத்திருந்தனர். இந்திய ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அவரை எச்சரித்து திருப்பி அனுப்பினர். எல்லை பகுதியில் நிலைமை மோசமடைந்து கொண்டே இருக்கிறது என்ற போதிலும் ராஜதந்திர நடவடிக்கை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று இந்திய தரப்பும் சீன தரப்பும் நம்பிக்கை தெரிவித்துள்ளன. வெகு விரைவில் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்படும் என்று இந்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் கூறியுள்ளார். வரும் 24ம் தேதி டெல்லியில் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த செய்தியாளர்கள் சந்தித்து பேசுவதற்கான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க வரும் சீனாவின் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தி சேனல்களின் ஆசிரியர்களுக்கு இந்திய  அரசு ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது. ஆனால் எல்லையில் பதட்டம் அதிகரித்ததையடுத்துன அனுமதியை இந்திய அரசு நேற்று முன்தினம் ரத்து செய்தது.  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்