முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெண்கலம் வென்ற தீபிகாவுக்கு ரூ.20 லட்சம் பரிசு

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, செப்.23-ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை தீபிகா பலிக்கலுக்கு ரூ. 20 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வரும் 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதனையடுத்து அவரை பாராட்டியுள்ள முதல்வர் ஜெயலலிதா, அவருக்கு ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசும் அறிவித்துள்ளார்.

இது குறித்து தீபிகாவுக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் பரிசுத் தொகை பற்றி குறிப்பிட்டுள்ளார். அந்த கடித விவரம் வருமாறு,

தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்று தமிழக மக்களை மீண்டும் ஒருமுறை பெருமைப்படுத்தியதற்காக தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசியப் போட்டிகளில் வெண்கலம் வெல்லும் வீரர்களுக்கான ஊக்கத்தொகையை ரூ.20 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு கடந்த 2011-ல் அறிவித்தது. அதன்படி, தமிழக அரசு தங்களை பாராட்டி ரூ.20 லட்சம் ரொக்கப்பரிசை வழங்குகிறது.

இனிவருங் காலங்களில் இந்தியாவுக்காக மேன்மேலும் பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஜிதுராய் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். அதே போல் தீபிகா ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறார். ஏற்கெனவே நடந்த காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளிலும் பல பதக்கங்களை வென்று தமிழக வீரர்கள் பெருமை சேர்த்ததும் அவர்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா பரிசுகளை அள்ளி வழங்கியதும் நினைவிருக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்