முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரபரப்பான சூழ்நிலையில் பார்லி., இன்று கூடுகிறது

ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை தொடங்குகிறது. டிசம்பர் மாதம் 23ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத் தொடர் 22 அமர்வுகளை கொண்டதாக இருக்கும்.
முந்தைய கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பது மசோதாக்கள் 15வது மக்களவையில்(ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது) நிலுவையில் உள்ள 47 மசோதாக்கள், அதற்கு முந்தைய மக்களவையில் நிலுவையில் உள்ள 16 மசோதாக்கள் உட்பட மொத்தம் 67 மசோதாக்களை இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு கடந்த மே மாதம் அமைந்த பிறகு கடந்த ஜூலையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை நிறைவேற்றும் நடவடிக்கைகளுக்கு மட்டுமே மத்திய அரசு முன்னுரிமை கொடுத்தது. இதனால் மத்திய சுகாதாரத் துறை தொடர்புடைய மனநல பராமரிப்பு சட்ட திருத்த மசோதா, மருந்துகள், அழகு சாதன பொருட்கள் சட்ட திருத்த மசோதா, ஹெச்ஐவி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சட்ட திருத்த மசோதா, மத்திய தொழிலாளர் நலத்துறையுடன் தொடர்புடைய பயிற்சியாளர்கள் சட்ட திருத்த மசோதா, தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதா, குழந்தை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு மற்றும் விதிகளை முறைப்படுத்துதல் சட்ட திருத்த மசோதா, கட்டுமான தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் மட்டும் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதே போல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் மாற்றுத்திறனாளிகள் உரிமை மசோதா, சிறார் நீதி மசோதா, தொழிற்சாலைகள் மசோதா, ரயில்வே சட்ட திருத்த மசோதா, தீர்ப்பாயங்கள் சேவை மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நிலைக்குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்திய காப்பீட்டு நிறுவனங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் 49 சதவீத அளவுக்கு நேரடி முதலீடு செய்ய வகை செய்யும் காப்பீட்டு சட்டங்கள் திருத்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் அந்த மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரி அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலக்கரி சுரங்கம்(சிறப்பு பிரிவு) அவசர சட்டத்தையும் ஜவுளி நிறுவனங்களை தேசியமயமாக்க வகை செய்யும் அவசர சட்டத் திருத்தத்தையும் மத்திய அரசு கொண்டு வந்தது. அவற்றை முறைப்படி இரு அவைகளிலும் அறிமுகப்படுத்தி நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முந்தைய கூட்டத் தொடரின் போது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி இடம் பெற்றிருந்தது. அண்மையில் நடந்து முடிந்த மகராஷ்டிர சட்டசபை தேர்தலையொட்டி இந்த கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து கூட்டணி பலம் குறைந்த நிலையில் வரும் கூட்டத் தொடரை காங்கிரஸ் எதிர்கொள்ளவுள்ளது.
பிஜூ ஜனதா தளம் கட்சியை சேர்ந்த கந்தமால் தொகுதி உறுப்பினர் ஹேமேந்திர சந்திரசிங் கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கபில் கிருஷ்ணதாகூர் கடந்த அக்டோபர் மாதம் 13ம் தேதியும் காலமானார்கள். இதையடுத்து அவை வழக்கத்தின்படி மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு முதல் நாள் அலுவல் நாள் முழுவதுமாக ஒத்தி வைக்கப்படும் என்று மக்களவை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. முந்தைய பாராளுமன்ற கூட்டத் தொடர் பட்ஜெட்டை நிறைவேற்ற முன்னுரிமை அளித்த நிகழ்வாக இருந்தது. ஆனால் கூட்டத் தொடர் தான் உண்மையிலேயே மோடி அரசின் செயல் திறனுக்கு சவால் விடுக்கும் நிகழ்வாக இருக்கும்.
இதற்கிடையே வரும் குளிர்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த பாராளுமன்றத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் டெல்லியில் நேற்று முன்தினம் கூட்டினார். இதில் மக்களவை துணை தலைவர் தம்பிதுரை, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கையாநாயுடு, மக்களவை அதிமுக குழு தலைவர் டாக்டர் பி. வேணுகோபால், லோக்ஜனசக்தி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் உள்ளி்ட்ட த லைவர்கள் கலந்து கொண்டனர். மாநில நலன்கள் சார்ந்து உறுப்பினர்கள் முன்வைக்கும் பிரச்சினைகளை அவையில் எழுப்ப நேரம் ஒதுக்க வேண்டும் என்று சுமித்ரா மகாஜனை கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கேட்டுக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து