முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ‘சிஸ்டம்’ சரியாக இருக்கிறது: ரஜினி கருத்துக்கு தம்பித்துரை பதில்

சனிக்கிழமை, 20 மே 2017      அரசியல்
Image Unavailable

சென்னை, சென்னை விமான நிலையத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லியில் நடைபெற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும், உரிமைகள் குறித்தும் எடுத்து கூறினேன். பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தமிழக அரசை மத்திய அரசு இயக்குகிறதா? என்பது பற்றி கருத்து தெரிவித்தபோது தமிழக அரசை மத்திய அரசு இயக்க வேண்டும் என்றால் நேரடியாகவே இயக்குவோம். மறைமுகமாக இயக்க வேண்டியது இல்லை என கூறி உள்ளார். இந்த அரசை இயக்குவது தமிழக மக்கள்தான். வேறு யாரும் கிடையாது. ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பதை கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும். ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறி இருக்கிறார். ஜனநாயக நாட்டில் மக்கள் சேவை செய்வதற்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அது அவரது தனிப்பட்ட உரிமை. ரஜினி பேசும்போது, நாட்டில் சிஸ்டமே சரி இல்லை என்று சொல்லி இருக்கிறார். இது அவரது பார்வை. ஆனால் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி சிறப்பான ஆட்சியாக உள்ளது. அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் இணைய வேண்டும் என்பது தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் ஆசை. அணிகள் இணைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். கட்சிக்குள் கருத்து வேறுபாடுகளும், பிளவும் இருப்பது சகஜம் தான். அவற்றை எல்லாம் மறந்து இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே எங்களது ஆசை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்