முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திங்கட்கிழமை, 8 ஏப்ரல் 2019      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நேற்று காலை 10.05 மணிக்கு மேல் 10.29 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். வரும் 15-ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் 8.24-க்குள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். 16-ம் தேதி திக்குவிஜயம் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 17-ம் தேதி காலை 9.50 மணிக்கு மேல் 10.14 மணிக்குள் மிதுன லக்னத்தில் நடைபெறுகிறது. 18-ம் தேதி காலை 5.45 மணிக்கு தேரோட்டமும், 19 -ம் தேதி தீர்த்தம் மற்றும் தேவேந்திரர் பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

திருக்கல்யாணத்தை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக கட்டணமில்லா தரிசன முறையில் 3,200 பேருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்கள் ரூ. 200, ரூ. 500 கட்டணத்தில் கோயில் இணையதளம் மூலம் 12-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் செய்துள்ளனர். 

திருவிழாவின் போதே பாராளுமன்ற தேர்தலும் நடைபெறுவதால் காவல் துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார்  பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். கூடுதலாக 2 ஐ.ஜி.க்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து