முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலிபான்கள் மீது வலிமையான தாக்குதல் நடத்தப்படுவது ஏன்? டிரம்ப் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

தலிபான்களுடன் அமைதி பேச்சு முடிந்து விட்டது. அவர்கள் தீவிரவாதத்தை மீண்டும் கையில் எடுத்ததால், அவர்கள் மீது முன்பைவிட வலிமையாக தாக்குதல் நடத்தப்படுகிறது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நியூயார்க் இரட்டை கோபுரம் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இதை தொடர்ந்து, இந்த அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடனுக்கு புகலிடம் கொடுத்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் அக்டோபரில் தாக்குதல் நடத்தின. அந்தப் போர் இன்னும் முடியாமல் உள்ளது. அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட காலமாக நடக்கும் போராக ஆப்கன் போர் மாறியது. இதை முடிவுக்கு கொண்டு வந்து, அமெரிக்க ராணுவத்தை ஆப்கானிஸ்தானில் இருந்து வாபஸ் பெற, அதிபர் டிரம்ப் முடிவு செய்தார். இதற்காக தலிபான் தலைவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டார். கடந்த சனிக்கிழமை தலிபான் தலைவர்கள், ஆப்கன் அரசு பிரதிநிதிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தவும் அதிபர் டிரம்ப் முடிவு செய்தார். ஆப்கானிஸ்தானில் தற்போது அமெரிக்க வீரர்கள் 14 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 5,400 பேரை 20 வாரங்களில் வாபஸ் பெற டிரம்ப் திட்டமிட்டு இருந்தார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலில் அமெரிக்க வீரர் ஒருவரும், 12 அப்பாவி மக்களும் கொல்லப்பட்டனர். இது டிரம்புக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால், தலிபான்களுடன் நடத்த இருந்த ரகசிய பேச்சுவார்த்தையை கடைசி நேரத்தில் ரத்து செய்தார். மேலும், தலிபான்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தும்படி அமெரிக்க ராணுவத்துக்கும் உத்தரவிட்டார்.

இது குறித்து வெள்ளை மாளிகையில் டிரம்ப் அளித்த பேட்டியில், அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் மீது ஆதிக்கம் செலுத்தலாம் என நினைத்து, தலிபான்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். அவர்கள் செய்தது மிகவும் கொடூரமான செயல். இந்த தாக்குதலில் அமெரிக்க வீரரும், 12 அப்பாவிகளும் பலியாகியுள்ளனர். எங்கள் வீரரோடு, நேட்டோ படை வீரர் ஒருவரும் பலியாகியுள்ளார். அதனால் அமைதி பேச்சுவார்த்தையை நிறுத்தி விட்டு, அவர்களை வெளியேற்றுங்கள் என கூறி விட்டேன். அவர்களுடன் எதுவும் பேச விரும்பவில்லை. தலிபான்கள் உடனான அமைதி பேச்சு முடிந்து விட்டது. தலிபான்கள் மீது முன்பைவிட வலிமையான தாக்குதல் தற்போது நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து