முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : இந்தியாவுடன் போர் வந்தால் பாகிஸ்தான் தோல்வியை தழுவும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே அமலில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். இதில் பாகிஸ்தான் தரப்பில் பெருத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 10-ம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் வீரர்கள் திடீரென அத்துமீறி இந்திய பகுதிகளை நோக்கி தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கே பாதுகாப்பு பணிகளை கவனித்துக் கொண்டிருந்த இந்திய வீரர்கள், உடனடியாக பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை மூண்டது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஹாஜிப்பூர் பகுதியில் நடந்த இந்த சண்டையில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த குலாம் ரசூல் என்ற வீரர் குண்டுபாய்ந்து உயிரிழந்தார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட பகவல்நகரை சேர்ந்த அந்த வீரரின் உடலை எடுத்துச் செல்ல சக வீரர்கள் முயன்றனர். இதற்காக இந்திய படையினருடன் ஒருபுறம் சண்டையிட்டவாறே, மறுபுறம் குலாம் ரசூலின் உடலை மீட்க முயன்றனர். ஆனால் பதிலடியை நிறுத்தாத இந்திய வீரர்களும், தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்துடன் சண்டையிட்டனர். இதில் ரசூலின் உடலை மீட்க முயன்ற மற்றொரு வீரரும் குண்டடிபட்டு சுருண்டு விழுந்து இறந்தார்.

இந்தியாவின் அதிரடி தாக்குதலில் பலியான இந்த இருவரின் உடல்களையும் மீட்க மற்ற வீரர்கள் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் முடியவில்லை. இதற்காக 2 நாட்களாக போராடியும் பலியானவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து கடந்த 13-ம் தேதி அவர்கள் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளைக்கொடியை ஏந்தினர். இந்திய நிலைகள் மீதான தாக்குதலை கைவிட்டு விட்டு, வெள்ளைக்கொடியுடன் அந்த வீரர்களின் உடல்களை நோக்கி முன்னேறினர். வெள்ளைக் கொடியை ஏந்தியிருந்ததாலும், பலியான வீரர்களுக்கு மதிப்பளிக்கும் நோக்கிலும் இந்திய ராணுவம் தாக்குதலை நிறுத்தியது. இதனால் பாகிஸ்தான் வீரர்கள் வந்து தங்கள் சக வீரர்களின் உடல்களை மீட்டு சென்றனர்.

இந்த காட்சிகளை இந்திய வீரர்கள் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். அந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டனர். இது ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதைப் பார்த்த பலரும் இந்திய ராணுவத்துக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனியார் டி.வி. ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாங்கள் ஒரு போதும் அணு ஆயுத போரில் ஈடுபட மாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம். இரண்டு அணு ஆயுத நாடுகள் வழக்கமான போரில் ஈடுபட்டால், அந்த போர், பெரும்பாலும் அணு ஆயுத போரில் தான் முடியும். வழக்கமான போர் ஏற்படுவதில் இருந்து கடவுள் எங்களை தடுத்திருக்கிறார். இந்த போர், ஏற்பட்டால் பாகிஸ்தான் தோல்வி அடையும். போரில், ஒரு நாட்டிற்கு இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும். ஒன்று சரண் அடைவது. மற்றொன்று, உங்களின் சுதந்திரத்திற்காக மரணம் வரை போரிடுவது. இதில், பாகிஸ்தான், இரண்டாவது வாய்ப்பிற்காக தான் போராடும். ஓரு அணுஆயுத சக்தி நாடு மரணம் வரை போரிட்டால், அதனால், பல பின் விளைவுகள் படு பயங்கரமாக இருக்கும். இதனால் தான் நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையையும், அனைத்து சர்வதேச அமைப்புகளின் உதவியை நாடுகிறோம். தற்போது அவை உடனடியாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து