முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை - தி.மு.க. தொடந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 11 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

புது டெல்லி : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை என்றும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27, 30-ம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து 9 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.

இதை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை மாநில தேர்தல் ஆணையம் புதிய தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. டிசம்பர் 27, 30-ம் தேதிகளில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்றும் மனுத்தாக்கல் 9-ம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி 9-ம் தேதி 27 மாவட்டங்களிலும் கிராம பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர்கள், ஒன்றிய பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இதற்கிடையே தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. அதில் ஊரக உள்ளாட்சிகளில் இட ஒதுக்கீடு வரையறையை தெளிவுபடுத்த வேண்டும். அதுவரை புதிய தேர்தல் அட்டவணையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. தி.மு.க.வை தொடர்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலை தடை செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன. இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடவடிக்கை தொடங்கி விட்டது. எனவே இதில் இனி கோர்ட் தலையிட இயலாது. மேலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் செய்யப்பட்டு விட்டது. இது தெரிந்து இருந்தும் தி.மு.க. மக்கள் நலனை கருதாமல் வேண்டுமென்றே மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது. எனவே தி.மு.க. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட் நேற்று தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் வழக்குகளை ஒன்று சேர்த்து விசாரணை நடத்தியது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி 3 விதமான உத்தரவுகளை பிறப்பித்தார்.

அதன்படி தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த தடையில்லை. தமிழக தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பாணையின்படி தேர்தலை நடத்தலாம். 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். ஊராட்சி தலைவர் உட்பட அனைத்து பதவிகளுக்கும் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில்தான் தேர்தல் நடத்த வேண்டும். 9 மாவட்டங்களிலும் 3 மாதங்களுக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து