முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ. ஒரு கோடி நிதியுதவி: ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். அறிவிப்பு

சனிக்கிழமை, 4 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அ.தி.மு.க. சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 
தமிழக மக்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், நோயுற்றோருக்கு சிகிச்சையும், நிவாரணமும் அளிப்பதற்காகவும் அ.தி.மு.க. அரசு இரவு, பகல் பாராமல் சுற்றிச் சுழன்று சிறப்பாக பணியாற்றி வரும் இந்த நேரத்தில், அரசின் கோரிக்கையை முழுமனதோடு ஏற்று, கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கென முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அ.தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இயற்கை பேரிடர் ஏற்பட்ட நேரங்களில் எல்லாம் மக்களின் தேவைகளை அறிந்து கண்ணும், கருத்துமாக விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அ.தி.மு.க.வும், அ.தி.மு.க. அரசும் கொரோனா நோய் தொற்று பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்றவும், மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளையும், ஊரடங்கால் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலில் மக்களுக்கு உரிய பணிகளை ஆற்றவும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.  பல நிலைகளிலும், வடிவங்களிலும் இப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் பெருமக்கள், அ.தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிப்பார்கள் எனவும், கொரோனா நோய் தடுப்பு மற்றும் மருத்துவ வசதிகளை அளிப்பதற்கான சிறப்பு நிதிக்கு, அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ஒரு கோடி ரூபாயையும், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா 25 லட்சம் ரூபாயையும் வழங்குவார்கள் எனவும் அ.தி.மு.க. சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.  அ.தி.மு.க. உடன்பிறப்புகள் தங்களால் இயன்ற உதவிகளையும், நிவாரணப் பணிகளையும் மக்களுக்கு செய்து வருகின்றனர். 

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்., நிரந்தரப் பொதுச் செயலாளர் அம்மா ஆகியோர் காட்டிய பாதையில் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற உணர்வோடு கட்சிப் பணிகளும், மக்கள் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து